தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2 ல் "டாஸ்மாக்" ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. சென்னையில் கூடி அறிவிப்பு
சென்னை : தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 2 ஆம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தொ.மு.ச. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி., பாட்டாளி தொழிற் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து நிலையில், மதுபானக் கடைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள டாஸ்மாக் கடை மீது கடந்த 4 ஆம் தேதி நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், டாஸ்மாக் கடை ஊழியர் செல்வம் மூச்சு திணறி உயிரிழந்தார்.
இந்நிலையில் சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, தொடரும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டும், கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரியும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒரு நாள் அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தொ.மு.ச. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி., பாட்டாளி தொழிற்சங்கங்களுடன் இணைந்த டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் இன்று (வெள்ளி) சென்னையில் கூடி ஆலோசனை நடத்தின.
இதையடுத்து டாஸ்மாக் கடை மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கக் கோரியும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அடுத்த மாதம் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவதென ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையடைப்பு நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.