குடிக்கும் பாலில் மட்டுமல்ல, அடிக்கும் சரக்கிலும் ஊழல்: டாஸ்மாக் மேனேஜர்கள் மூவர் சஸ்பெண்ட்
சென்னை: ஆவின் பால் ஊழல் புகார் ஒருபக்கம் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'குடிமகன்களின்' வயிற்றில் அடிப்பதுபோல டாஸ்மாக் நிறுவனத்திலும் மேலாளர்கள் ஊழல் செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குழந்தைகள் குடிக்கும் பால் முதல், குடிமகன்கள் அடிக்கும் சரக்கு வரை அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடுவது இதில் இருந்து அம்பலமாகிறது.
ஆவின் பால் ஊழல் குறித்து செய்தி வெளியாகிய நிலையில், பால் விலையை அரசு உயர்த்தியது. ஊழலால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டவே பால் விலை உயர்த்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் பாலை தொடர்ந்து மதுபான விலையையும் அரசின் டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தியது. இதன் பின்னணியிலும் ஊழல் இருக்கலாம் என்று தெரிகிறது.

தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 7000 மதுக்கடைகள் உள்ளன. இவை அனைத்தும் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் செயல்படுபவையே. நிர்வாக வசதிகளுக்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய 5 மண்டலங்களின் கீழ் 33 மாவட்டங்களாக டாஸ்மாக் நிறுவனம் பிரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 மாவட்ட மேலாளர்களும், பணியிட மாற்றம், மது குடிப்பகங்களுக்கு உரிமம் வழங்குதல், மதுபானங்களை கொள்முதல் செய்தல், நிலுவைத்தொகையை வசூலித்தல் உள்ளிட்டவற்றில் முறைகேட்டில் ஈடுபட்டு, அதன் மூலம் பல லட்ச ரூபாய் ஈட்டியதாகவும், இதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரின்பேரில், தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் வட சென்னை மாவட்ட மேலாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் ணியிடை நீக்கம் செய்துள்ளது.
தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தென் சென்னை மாவட்ட மேலாளர் மகேஸ்வரி 2008 - 2009 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வேலூரில் பணியாற்றிய போது முறைகேட்டின் மூலம் 28 லட்ச ரூபாய் ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications