டாஸ்மாக் நாளைக்கு லீவ்… இன்றைக்கே பாட்டில் வாங்க அலைமோதும் குடிமகன்கள்
சென்னை: நபிகள் நாயகம் பிறந்த தினத்தினை முன்னிட்டு தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இதனால் குடிமன்னர்கள் இன்றே சரக்குகளை வாங்கி குவித்து வருகின்றனர்.
வழக்கம்போல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்குத்தான் திறக்கப்படும். ஆனால், சென்னையில் சில பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே கடைகள் திறக்கப்படுகிறது. பாதுகாப்புக்கு காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நபிகள் நாயகம் பிறந்த தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் தவறினால், மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு, நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளதை அடுத்து குடி மன்னர்கள் இப்போதே மதுபானங்களை வாங்கி குவித்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது
புத்தாண்டு விற்பனை
புத்தாண்டு தினத்தையொட்டி தமிழகத்தில் மதுபான விற்பனை ரூ.164 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.22 கோடி அதிகம் என்கிறது புள்ளிவிபரம்.
புத்தாண்டு அன்று ஒரே நாளில் 7,300 பெட்டி மதுபான வகைகளும், 3,400 பீர் வகைகளும் விற்பனை ஆகி உள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும்.தமிழகம் எதில் சாதனை படைக்குமோ, இல்லையோ மதுவிற்பனையில் ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்து வருகிறது.
எத்தனை கடைகள்
தமிழகத்தில் மொத்தம் 6,800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளும், 21 எலைட் கடைகளும் உள்ளன. தமிழகத்தில் உள்ள ‘டாஸ்மாக்' கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடிக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் ரூ.80 கோடிக்கு மேலும் மது விற்பனை நடைபெறும்.
மது பிரியர்கள்
பண்டிகை காலங்களில் மதுபிரியர்கள் நண்பர்கள், உறவினர்களுடன் மது அருந்தி பண்டிகைகளை கொண்டாடுவதை விரும்புகிறார்கள். இதனால் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது ‘டாஸ்மாக்' கடைகளில் கூட்டம் அலைமோதும். இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே, ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி இந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகையையொட்டி, கடந்த 31 ஆம் தேதி (புத்தாண்டு முந்தைய தினம்) ரூ.84 கோடிக்கும், 1 ஆம் தேதி (புத்தாண்டு அன்று) ரூ.80 கோடிக்கும் என 2 நாட்களில் மட்டும் ‘டாஸ்மாக்' கடைகளில் ரூ.164 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளது.
ரூ.164கோடி
கடந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகையின்போது 31 ஆம் தேதி (புத்தாண்டுக்கு முந்தைய தினம்) ரூ.82 கோடிக்கும், 1 ஆம் தேதி (புத்தாண்டு அன்று) ரூ.60 கோடிக்கும் என 2 நாட்களுக்கு ரூ.142 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மது விற்பனை கடந்த ஆண்டைவிட ரூ.22 கோடி அதிகரித்துள்ளது.
பிராந்தி அதிகம்
இந்த ஆண்டு மது விற்பனையில், பிராந்தி மது வகைகள் அதிகளவு விற்பனையாகி உள்ளது. மொத்தம் 30 லட்சம் மதுபான வகை பெட்டிகளும் 1 லட்சத்து 45 ஆயிரம் பீர் பெட்டிகளும் விற்றுள்ளன.
திருப்பூர் நம்பர் 1
தமிழகத்தில் மது விற்பனையில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தையும், காஞ்சிபுரம் 2 ஆம் இடத்தையும், சென்னை 3வது இடத்தையும் பிடித்துள்ளது" என்றார்.
2013ஆம் ஆண்டு விற்பனை
கடந்த 2013ஆம் ஆண்டு கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் மூலம் 7,925 பெட்டிகள் மதுபான வகைகளும், 3,900 பீர் பாட்டில்களும் விற்பனை செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.3 கோடியே 80 லட்சம் ஆகும். 2013ஆம் ஆண்டில் மொத்த மதுபான விற்பனை சுமார் ரூ.800 கோடி ஆகும்.
2014ஆம் ஆண்டு விற்பனை
கடந்த 2014ஆம் ஆண்டில் ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை மொத்தம் 22 லட்சம் மதுபான பெட்டிகள், பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுபான விற்பனை ரூ.1,050 கோடி ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.