கம்யூனிஸ்ட்களுடன் நித்யானந்தா மோத வேண்டாம்: தா.பாண்டியன் எச்சரிக்கை
சென்னை: கம்யூனிஸ்ட்களுடன் மோத வேண்டாம் என நித்யானந்தாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 16-வது மாநில மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வந்த தா.பாண்டியன் செய்தியாளர்களிடம், நித்தியானந்தாவை கடுமையாக சாடினார்.
ஆன்மிக துறைக்கு அவமானத்தை ஏற்படுத் துகிற வகையில் பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தா கம்யூனிஸ்ட் கட்சிகளை பார்த்து விமர்சனம் செய்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்துபவர்கள். காசு கொடுத்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார். அவர் பெண்கள் விஷயத்தில் தான் பண்போடு நடந்து கொள்ளவில்லை என்று நினைத்தேன். அரசியல் கட்சியினரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. அவர் மீதான வழக்கை அமைதியாக சந்தித்தால் அவருக்கு நல்லது. கம்யூனிஸ்ட்களுடன் அவர் மோத வேண்டாம்.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு விலைவாசி 15 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்ந்துள்ளதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதங்களை இலங்கை அரசு கொச்சைப்படுத்திய விவகாரம், மத்திய அரசு தனிநபர் பிரச்சினையாக பார்க்கிறது.
இலங்கை அரசு இவ்வாறு அவமதிக்க, ஆணவத்துடன் செயல்பட யார் காரணம்?. கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு வரலாறு தெரியாமல் உள்ளது.
அவதூறு வழக்குகள் தாக்கல் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். சாலை விபத்துகளில் இழப்பீடு பெறுவதில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.
தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.