கடலூரில் மீனவர்கள் பயங்கர மோதல்: அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை.. போலீஸ் குவிப்பு!
கடலூரில் மீனவர்கள் மோதிக் கொண்டதில் அதிமுக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டார்.
கடலூர்: கடலூரில் இரு மீனவ கிராமங்களுக்கும் ஏற்பட்ட மோதலில் அதிமுக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டார். மோதல் காரணமாக கலவர பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் நடந்து வருவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே பைபர் படகு மூலம் மட்டும் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். இந்தநிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே பைபர் படகில் சென்று மீன்பிடிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த 2 பகுதி மீனவர்களுக்கிடைய முன்விரோதம் இருந்து வருகிறது.
இன்று காலை தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டி ருந்தனர். அப்போது முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு 2 பகுதி மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சோனாங்குப்பம் பகுதி மீனவர்களை சுற்றிவளைத்து அவர்களை கரைக்கு திரும்ப முடியாமல் தேவனாம்பட்டினம் மீனவர்கள் மறித்தனர். அதில் சில மீனவர்கள் கடலில் குதித்து கரைக்கு திரும்பி வந்தனர். ஆனால் சோனாங்குப்பம் மீனவர்களில் பலர் கரைக்கு திரும்ப முடியாமல் படகிலேயே இருந்தனர்.
ஆயுதங்களுடன் திரண்டன மீனவர்கள்
கரைக்கு திரும்பிய அவர்கள், தேவனாம்பட்டினம் மீனவர்கள் தகராறில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர். இதுகுறித்து முதுநகர் போலீசில் சோனாங் குப்பம் பகுதி மக்கள் புகார் செய்தனர். ஆனால் போலீசார் சோனாங்குப்பத்துக்கு வர காலதாமதம் ஏற்பட்டது. இந்த இடைபட்ட நேரத்தை பயன்படுத்தி தேவனாம்பட்டினத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் அரிவாள், கடப்பாரை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திரண்டு, சோனாங்குப்பத்துக்கு நடந்து சென்றனர்,
அதிமுக பிரமுகர் வெட்டி கொலை
தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் ஆயுதங்களுடன் ஊர்வலமாக செல்லக் கூடாது என தடுத்தனர். இதனால், போலீசாருக்கும், தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் தடையை மீறி சென்றதால், மீனவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இந்தநிலையில் தேவனாம்பட்டினம் மீனவர்களில் 15 பேர் திடீரென சோனாங்குப்பத்துக்கு அரிவாளுடன் சென்றனர். அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் 65, மற்றும் பாண்டியன் 58, ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதைதடுக்க வந்த முனியம்மாள் 65, ஏழாயி 45, ஆகிய 2 பெண்களையும் அவர்கள் தடியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அச்சத்தில் மீனவர்கள்
இந்த தாக்குதலில் பஞ்சநாதன், பாண்டியன், முனியம்மாள் மற்றும் ஏழாயி ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அங்கிருந்தோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பஞ்சநாதன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். பாண்டியன் உள்பட 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோனாங்குப்பத்தில், டி.ஜ.ஜி.சந்தோஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்கள், கடலில் மீன்பிடிப்பது பாதிக்கப்படுமோ என அச்சத்தில் உள்ளனர்.
கடலூரில் தொடரும் பதட்டம்
இதேபோல் தேவனாம்பட்டினத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அரிவாளால் வெட்டி விட்டு தப்பிஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். அத்துடன் கடலோர போலீசாரும் கடலுக்குள் சென்றுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து சோனாங்குப்பம் பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு டீசல் கேனுடன் சென்றனர். அங்கு கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை எரிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் போலீசார் அங்கு சென்று அவர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் கடலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.