"ஸ்டிக்கர்".. ஊரான் பிள்ளைக்கு ஒரு நியாயம்.. அமைச்சர் வீட்டு மணமக்களுக்கு ஒரு நியாயமா?
சென்னை: பிரச்சினை இப்படித்தான் வரும் என்று எப்போதுமே சொல்ல முடியாது.. இப்படியெல்லாம் கூட வரும். ஆம், "அம்மா" ஸ்டிக்கரை வைத்து சமூக வலைதளங்களில் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர் நெட்டிஸன்கள்.
"அம்மா ஸ்டிக்கரே" ஒரு பஞ்சாயத்துத்தான். அதை வைத்து என்னம்மா பஞ்சாயத்து என்று அங்கே சிலர் கேட்பது நமது காதில் விழுகிறது. அந்தப் பஞ்சாயத்தைப் பத்தி இங்கே சொல்லவில்லை. இது வேற பஞ்சாயத்து.. ஆனால் மேட்டர் ஸ்டிக்கர்தான்!
சமீபத்தில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட இலவச திருமணத்தின்போது மணமக்களின் நெற்றியில் "அம்மா ஸ்டிக்கர்" ஒட்டப்பட்ட பட்டையைக் கட்டி விட்டு அதிமுகவினர் அதகளம் செய்திருந்தனர். இது பெரும் சர்ச்சையையும் கிளப்பியது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 4 அமைச்சர்கள் உள்பட 14 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழா நடைபெற்றது.
இதை வைத்து வாட்ஸ் ஆப்பில் ஒரு படம் உலா வருகிறது. அதில் இலவசத் திருமணத்தில் அம்மா ஸ்டிக்கரை நெற்றியில் கட்டப்பட்ட மணமக்களின் படத்தையும், கீழே நேற்று நடந்த திருமண விழாவில் காணப்பட்ட மணமக்களின் படத்தையும் போட்டுள்ளனர்.
அதில் சாதாரண மணமக்களுக்கு அம்மா ஸ்டிக்கர், அமைச்சர்கள் வீட்டு மணமக்களுக்கு ஸ்டிக்கர் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டி ஊரான் வீட்டுப் பிள்ளைனா நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டுவீங்க.. அமைச்சர் வீட்டுப் பிள்ளைனா மரியாதையா நடத்துவீங்களா என்று கேட்டுள்ளனர்.
அதானே.. நேற்று ஜெயலலிதா நடத்தி வைத்த திருமணத்தில் மணமகன்கள், மணமகள்கள் யாருடைய நெற்றியிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை. மணமக்கள் அணிந்திருந்த எந்த நகை நட்டிலும் கூட ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.