காட்டுக்குள்ள செம குளிர்.. வனப்பேச்சியம்மன் கோவிலுக்கு வாக்கிங் வந்த முண்டன்துறை புலி
திருநெல்வேலி: முண்டந்துறை புலிகள் வனப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால், அங்குள்ள புலிகள், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உலா வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு - முண்டத்துறை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உளளன.
முண்டத்துறையில் புலிகள் இல்லை என்ற சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து வனத்துறையினர் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. இதன் மூலம் முண்டத்துறை வனப்பகுதியில் 9 புலிகள் இருப்பது உறுதியாக தெரியவநதது.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முண்டத்துறை புலிகள் காப்பகத்தில் கீழணையில் வன பேச்சியம்மன் கோவில் உள்ளது.
இங்கு தினமும் பூஜை நடைபெறுவது வழக்கம். செவ்வாய், வெள்ளிகிழமைகளில் மட்டும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். இந்த நிலையில் பூஜை செய்வதற்காக பூசாரி வழக்கம் போல் கோயிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கோயிலுக்கு மேல்புறம் உள்ள ஒரு பாதையில் புலி படுத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டுமே கோயிலுக்கு வந்திருந்தனர்.
புலியை பார்த்த அவர்கள் பீதியடைந்தனர். சுமார் 10 நிமிடம் சாலையில் படுத்து கிடந்த புலி ஆள்கள் நடமாட்டம் தெரியவே மீணடும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இதுகுறித்து கோயில் பூசாரி கூறும்போது வழக்கமாக கோயிலின் பின் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும். ஆனால் இதுவரை புலியை பார்த்தது இல்லை. இப்போதுதான் முதன் முறையாக புலியை பார்க்கிறேன் என்று பீதியுடன் தெரிவித்தார்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். வனத்துறையினர் கூறுகையில், பொதுவாக புலிகள் மனித நடமாட்டம் உள்ள பகுதிக்கு வருவதில்லை. தற்போது வனப்பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. சில பகுதிகளில் கொசுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் காட்டுப் பகுதியை விட்டு புலி வெளியேறி வந்திருக்கலாம். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றனர்.