நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றம்: பிப்.24 முதல் அமல்
சென்னை: நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் நேரம் பிப்ரவரி 24-ந்தேதி முதல் மாற்றப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரயில்கள் இயக்க வசதிக்காக நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் பிப்ரவரி 24-ந்தேதி முதல் மாற்றப்படுகிறது. அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 8.10 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) பிப்ரவரி 24-ந்தேதி முதல் இரவு 8.50 மணிக்கு புறப்படும்.
இந்த ரயில் மதுரைக்கு அதிகாலை 5.30 மணிக்கும், சிவகாசிக்கு காலை 6.42 மணிக்கும், செங்கோட்டைக்கு காலை 9 மணிக்கு சென்றடையும்.
மறுபாதையில் செங்கோட்டையில் இருந்து தினமும் இரவு 7 மணிக்கு புறப்படும் அந்த ரயில் (12662) நேரம் மாற்றத்திற்கு பின் மாலை 6.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருச்சிக்கு நள்ளிரவு 12.20 மணிக்கும், சென்னை எழும்பூரை காலை 6.40 மணிக்கும் வந்தடையும்.
இதேபோன்று சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.50 மணிக்கு நெல்லை புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12631) பிப்ரவரி 24-ந்தேதி முதல் இரவு 8.10 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 8 மணிக்கு நெல்லையையும் சென்றடையும்.
நெல்லையில் இருந்து தினமும் மாலை 6.50 மணிக்கு புறப்படும் அந்த ரயில் (12632), நேர மாற்றத்திற்கு பின் இரவு 7.25 மணிக்கு புறப்படும். இந்த ரயில் இரவு 10.10 மணிக்கு மதுரையையும், மறுநாள் காலை 7.10 மணிக்கு எழும்பூரையும் வந்தடையும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.