மீண்டும் நாளை கூடுகிறது சட்டசபை
சென்னை: தமிழக சட்டசபை விடுமுறைக்குப் பின்னர் நாளை மீண்டும் கூடுகிறது. திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக உரிமை மீறல் குழுவின் அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படலாம் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. துறை வாரியான மானியக் கோரிக்கை மீது விவாதங்களும், வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 4ம் தேதியன்று ஒத்திவைக்கப்பட்டது.
இடையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறுக்கிட்டதால் சட்டசபைக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டது. செப்டம்பர் 14ம் தேதி மீண்டும் சபை கூடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை சட்டசபை மீண்டும் கூடுகிறது. நாளை கேள்வி நேரத்துக்குப் பிறகு வருவாய், செய்தி-விளம்பரத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுகின்றன.
மேலும் முதல்வர் ஜெயலலிதா கைவசம் உள்ள காவல், தீயணைப்பு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான மானியம் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். சட்டசபை கூட்டத் தொடர் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது.
திமுக தலைவர் கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை உரிமை மீறல் குழு நாளை தாக்கல் செய்யவுள்ளது. எனவே திமுக தரப்பு டென்ஷனாக உள்ளது. இது அவையில் புயலைக் கிளப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.