மழை வெள்ள சேதத்தை விரைவாக கணக்கிடுங்கள்: மத்திய குழுவிடம் ஜெயலலிதா கோரிக்கை
சென்னை: மழை, வெள்ள சேதங்களை பார்வையிட தமிழகம் வந்ததுள்ள மத்திய குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை, சந்தித்து பேசினர். வெள்ளசேதத்தை விரைவாக கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். பிற்பகல் முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்தியக்குழுவினர் பார்வையிட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை சேதங்களுக்காக ரூ. 8 ஆயிரத்து 481 கோடி மத்திய நிதியை கோரிய முதல்வர் ஜெயலலிதா, மத்திய குழுவை அனுப்பி ஆய்வு செய்யும்படி கோரிக்கை விடுத்தார். முதல்கட்டமாக ரூ. 939 கோடியே 63 லட்சத்தை வழங்கிய மத்திய அரசு, மத்திய குழுவை விரைவில் அனுப்புவதாகவும் தெரிவித்தது. மத்திய குழு இந்த வாரம் இறுதியில் வரும் என தெரிவிக்கப்பட்டது.
மத்திய குழு வருகை
அதன்படி மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் வேளாண் அமைச்சக கூடுதல் ஆணையர் ஒய்.ஆர்.மீனா, நிதி அமைச்சக இணை இயக்குனர் எம்.எம்.சச்தேவா, குடிநீர் அமைச்சக முதுநிலை ஆலோசகர் ஜார்கர், சென்னையில் உள்ள மத்திய குடிநீர் அமைச்சக மூத்த மண்டல இயக்குனர் ரோஷினி, எரிசக்தித்துறை உதவி இயக்குனர் சுமித் கோயல், ஊரக மேம்பாட்டு அமைச்சக இயக்குனர் வி.சி.பேரா, பெங்களூரூவில் இருக்கும் மத்திய நீர்வள அமைச்சக மேற்பார்வை பொறியாளர் என்.எம்.கிருஷ்ணன் உன்னி, சென்னையில் இருக்கும் சாலைப் போக்குவரத்து அமைச்சக மண்டல இயக்குனர் டி.எஸ்.அரவிந்த் ஆகிய 9 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்றிரவு தமிழகம் வந்தனர்.
முதல்வருடன் சந்திப்பு
இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் ஞானதேசிகனை இந்த குழுவினர் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசிய மத்திய குழுவினர் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். இன்று பிற்பகல் முதல் தங்களின் ஆய்வினை தொடங்க உள்ளதாக முதல்வரிடம் தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முழுமையான ஒத்துழைப்பு
அப்போது, தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். ஆய்வறிக்கையை விரைவாக அளிக்கும் படியும் அப்போதுதான் விரைவாக நிதியை மத்திய அரசு வழங்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார். சந்திப்பு முடிந்ததும் மத்திய குழுவினர் 3 குழுக்களாக பிரிந்து வெள்ள சேதப் பகுதிகளை பார்வையிட புறப்பட்டுச் சென்றனர்.
மத்திய குழு ஆய்வு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் 28ம் தேதிவரை இந்தக் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இன்று பிற்பகல் முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்கின்றனர். தாம்பரம், முடிச்சூர், ராஜ கீழ்பாக்கம், தாம்பரம் புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கத்திலும் அடையாறு பாலம் பகுதிகளிலும் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். முதல்கட்டமாக, அதிகளவில் பாதிக்கப்பட்ட கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளும் என தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.