சண்டை போட்டுக்காம கொடியேற்றி.. லட்டு சாப்பிட்டு... சுதந்திர தினத்தைக் கொண்டாடிய காங்கிரஸார்!
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அமைதியான முறையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. கொடியேற்றி வைப்பது யார் என்பது குறித்து ஏற்கனவே சர்ச்சை இருந்ததால் பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறாமல் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கொடியேற்றி கொண்டாடினர்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, வசந்தகுமார், குஷ்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் மேலிடத்திலிருந்து தேசிய செயலாளர் சின்னா ரெட்டி என்பவர் வந்திருந்தார். அவரது முன்னிலையில் கே ஆர்.ராமசாமி கொடியேற்றி வைத்தார். அனைவரும் சல்யூட் வைத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.
கோஷ்டிப் பூசல் இருக்கு... என்ன பண்றது.!
பின்னர் சின்னா ரெட்டி கூறுகையில், தமிழக காங்கிரசில் கோஷ்டிகள் இருப்பதை அறிவேன். ஆனால் இன்று எல்லோரும் ஒற்றுமையாக நின்று சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளோம்.
ஒற்றுமையா இருப்போம்ல
இதேபோல் காங்கிரஸ் உணர்வுடன் தான் அனைவரும் இருப்பார்கள். புதிய தலைவரை நியமிப்பது பற்றி கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது. விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்படலாம்.
விரைவில் டெம்பரரி தலைவர்
ஒருவேளை காலதாமதம் ஆனால் தற்காலிக தலைவர் நியமிக்கப்படுவார். விரைவில் வரவிருக்கும் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டால் அவர் தலைமையில் நடைபெறும் அல்லது இன்று நடந்தது போல் சிறப்பாக நடத்தப்படும் என்றார் சின்னா ரெட்டி.
லட்டு சாப்பிட்டாங்க
கொடியேற்றி வைத்ததும் லட்டு தரப்பட்டது. தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் லட்டு ஊட்டி விட்டுக் கொண்டது காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. தொண்டர்களும் கூட அமைதியான முறையில் இருந்து லட்டு வாங்கிச் சாப்பிட்டனர்.