குமரியில் 2வது இடத்துக்கு அதிமுக, திமுக, காங். கடும் போட்டி: சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: குமரி தொகுதியில் இரண்டாவது இடத்தை பிடிக்க அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக பாஜக மாநில தலைவரும், குமரி தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இரவு 10 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பணப் பட்டுவாடா செய்பவர்களுக்கு தான் இரவு நேர பிரச்சாரம் பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே பல இடங்களில் பண பட்டுவாாட நடந்து வருவதாக கூறப்படுகிறது.
பிரச்சாரத்தின்போது வேட்பாளரின் பெயரையே கூறக் கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது? சட்டங்கள் எல்லாம் இயற்றப்பட்டு சட்டைப்பையில் வைக்கும்படியே இருக்கிறது. மோடி தமிழகத்திற்கு வரும் தேதி தெரிந்ததும் அறிவிக்கிறோம். தேர்தலுக்கு பிறகு பாஜகவை ஆதரிப்பதாக அதிமுக எங்களிடம் தெரிவிக்கவில்லை. பாஜகவுக்கு தமிழகத்திற்கு என்று தனியாக தேர்தல் அறிக்கை இல்லை. குமரியில் அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு இடையே தான் கடும் போட்டி. அந்த போட்டியே இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது என்பது தான் என்றார்.
வசந்தகுமார்
குமரியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுவதாக அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குமரி தொகுதியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ஆசியோடு வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். நான் வேட்பு மனு தாக்கல் செய்தபோது வந்த கூட்டத்தின் மூலம் குமரி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்தின் மாவட்டம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நான் வெற்றி பெற்றால் குமரியில் இரட்டை ரயில் பாதை திட்டத்தை கொண்டு வருவேன். மேலும் குமரி மாவட்டத்தை மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைப்பேன். குமரியில் படித்தவர்கள் அதிகம் உள்ளதால் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தை அமைத்து அவர்களுக்கு வேலை கிடைக்கும்படி செய்வேன்.
குமரியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி. திமுக காங்கிரஸுடன் ஒத்துப்போவதாக பொய்யான தகவலை பரப்பி காங்கிரஸின் ஓட்டுகளை பெற அவர்கள் முயற்சிக்கிறார்கள். அது குமரி மாவட்டத்தில் நடக்காது. எனக்கு வாக்கு சேகரிக்க வரும் 18ம் தேதியில் இருந்து 20ம் தேதிக்குள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தமிழகம் வருகிறார்கள். வரும் 11ம் தேதி மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பிரச்சாரம் செய்கிறார். அவர்கள் தவிர மாநில தலைவர் ஞானதேசிகன், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் எனக்காக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றார்.