ஸ்டேஷன் மாஸ்டரின் தவறால் தடம் புரண்ட சென்னை - பழனி ரயில்.. பயணிகள் தப்பினர்
தருமபுரி: சென்னையில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில், கிருஷ்ணகிரி அருகே நள்ளிரவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து பழனிக்கு விரைவு ரயில் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் சுமார் 2000 பயணிகள் பயணம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த தாசம்பட்டி ரயில் நிலையம் அருகே அதிகாலை 2 மணி அளவில் ரயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் என்ஜினும், அதற்கடுத்த 2 பெட்டிகளும் பயங்கர சத்தத்துடன் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.
நள்ளிரவில் பெட்டிகள் பலத்த சத்தத்துடன் குலுங்கியதால் அதில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். ரயில் தடம் புரண்டதை அறிந்த அப்பகுதி மக்கள், உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ரயில் பயங்கர சத்தத்துடன் குலுங்கியதால் மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகளும், அச்சத்துடன் கீழே இறங்கினர். இந்த விபத்தில் ஒருவர் மட்டும் காயமடைந்ததாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற ரயிலில் இருந்த சுமார் 2000 பயணிகளும், வேறு ரயில் மூலம் சேலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை - கோவை மார்க்கத்தில் விபத்து ஏற்பட்டதால் அடுத்தடுத்து வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் மாற்று வழியில் அவை அனைத்தும் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன.
ஸ்டேஷன் மாஸ்டரின் கவனக்குறைவு தான் விபத்துக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. அவர் தண்டவாளத்தை மாற்றி விடாததால் ரயில் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. ரயில் குறைவான வேகத்தில் வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட இரண்டு பெட்டிகள் தவிர, மற்ற பெட்டிகள் மீட்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.