அழகென்ற சொல்லுக்கு முருகா... வைகாசி விசாகம்: முருகனுக்கு பக்தர்கள் பாலாபிஷேகம்!
சென்னை: தமிழ் கடவுளான அழகன் முருகனின் அவதார திருநாள் வைகாசி விசாகம். இதனால்தான் முருகன் விசாகன் பெயராலும் அழைக்கப்படுகிறார். பிரசித்தி பெற்ற முருகனின் அறுபடை வீடுகளான சுவாமிமலை, திருச்செந்தூர், பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை மற்றும் மருதமலை ஆகிய திருத்தலங்களில் வைகாசி விசாகம் இன்று களைகட்டியுள்ளது.
வைகாசி விசாகத்தில் விரதமிருந்து முருகனை தரிசித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். வேலுண்டு வினையில்லை என்பார்கள். வேலால் தன் பக்தர்களின் வினைகளை அறுப்பவன். விசாக திருநாளில் முருகப்பெருமானுக்கு விரதமிரந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி.
குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
இந்த விரதத்தை ஆண்களும் இருக்கலாம். அன்றைய தினம் பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து ஆறுமுகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வர்.
பால் குடம் சுமந்தும், காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா' என்று முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களை நோக்கி முருக பக்தர்கள் படையெடுப்பார்கள்.
திருப்பரங்குன்றத்தில்
முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றனத்தில் விசாகத்தை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு அருள்மிகு சுப்பிரமணியருக்கு (ஆறுமுகங்களுடன் அருள்பாலிப்பவர்) சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அங்கிருந்து வள்ளி, தெய்வானையுடன் புறப்பாடாகும் சுப்பிரமணியர், கொடிக்கம்பம் அருகேயுள்ள விசாகக் கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார்.
பால்குடம், காவடிகள்
மதுரை மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், பல்வேறு காவடிகள் மற்றும் முதுகில் கொக்கி மாட்டி கயிற்றின் மூலம் இழுத்துவரும் சிறிய தேர்களில் கொண்டு வரும் பாலை, சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை முதல் பிற்பகல் 2 மணி வரை பாலாபிஷேகம் நடைபெறும்.
திருச்செந்தூர் முருகன்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வசந்த விழாவாக கடந்த மே 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் நிறைவு நாளான இன்று விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துக்குப் பின்னர், முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.
பாதையாத்திரை பக்தர்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே திருக்கோயிலில் குவியத் தொடங்கினர். நடை திறந்தவுடன் சுவாமியை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பழனியில் தேரோட்டம்
பழனியில் கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கிய வைகாசி விசாக விழா 10 நாள்கள் நடைபெற்று வருகிறது. 6ஆம் நாள் நேற்று (மே 31-ஆம் தேதி) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 7-ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று மாலை 4.35 மணிக்கு தேரடியில் வைகாசி விசாகத் தேரோட்டமும் நடைபெறுகின்றன. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.
சென்னை முருகன் ஆலயங்களில்
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் பல முருகன் கோவில்கள் உள்ளன. பழனிக்கு இணையாக போற்றப்படும் வடபழனி, பாரிமுனை கந்தகோட்டம், குன்றத்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருநாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
வடபழனியில் வழிபாடு
வடபழனி முருகன் கோவிலில் விசாக திருநாளில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சந்தன அபிசேகம் செய்து முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உச்சி காலத்தில் தீர்த்த வாரியும் அதை தொடர்ந்து ராஜ அலங்காரத்திலும் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலையில் புஷ்ப அலங்காரம் செய்யப்படுகிறது.
பால்குடம் சுமந்து
இன்று ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்தும் காவடிகள் சுமந்தும் வருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கந்தகோட்டத்திலும் முருகனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகிறது.