கோவில்பட்டியில் பக்தரை கொடூரமாக தாக்கிய மதிமுக தொண்டர்கள்- மவுனமாக வேடிக்கை பார்த்த வைகோ
கோவில்பட்டி: தம் கண் முன்னால் பக்தர் ஒருவரை மதிமுக தொண்டர்கள் அடித்து துவைத்த போதும் அதை மவுனமாக அக்கட்சி பொதுச்செயலர் வைகோ வேடிக்கை பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் மதிமுக வேட்பாளராக வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் திடீரென தாம் போட்டியிடவில்லை; தமக்கு பதிலாக விநாயகா ரமேஷ் போட்டியிடுவார் என அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கோவில்பட்டி பத்ரகாளி அம்மன் கோவில் அருகே வைகோ பிரசாரம் செய்வதற்காக வந்தார். அவரது பிரசார வாகனம் நகர முடியாத வகையில் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
உடனே மதிமுக தொண்டர்கள் கோவிலுக்குள் சென்று இருசக்கர வாகனத்தை நிறுத்திய பக்தரை அழைத்து வந்தனர். அப்போது மதிமுகவினருக்கும் அந்த பக்தருக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்தது. திடீரென மதிமுக மாவட்ட செயலர் ஆர்.எஸ். ரமேஷ், பக்தரை ஓங்கி அறைந்து கடுமையாகத் தாக்கினார். இதில் அந்த நபர் பலத்த காயமடைந்தார்.
இந்த சம்பவம் அனைத்தையுமே மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வைகோ சட்டென அப்பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். வைகோவின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வைகோ பேச்சால் பதற்றம்
இதனைத் தொடர்ந்து கீழபாண்டவர்மங்கலம் என்ற பகுதியில் பிரசாரம் செய்த வைகோ, முதுகுளத்தூர் வன்முறையில் தலித் மக்கள் எப்படியெல்லாம் ஆதிக்க ஜாதியினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர் என்பதை விவரித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதை அங்கிருந்த தலித் மக்கள் ரசிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் தலித் மக்களின் தலைவர் இமானுவேல் சேகரன் படுகொலைக்கு முத்துராமலிங்க தேவர் காரணம் இல்லை என வைகோ கூறியிருந்தார்.
தற்போது தலித் மக்கள் வாக்குகளுக்காக அப்படியே தலைகீழாக மாற்றி பேசுகிறாரே என அங்கு சலசலப்பு ஏற்பட்டது.