சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடத் திரண்ட வேல்முருகன்.. நூற்றுக்கணக்கனோர் கைது
சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடத் திரண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக கிண்டியிலிருந்து அவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் விளைவித்த மத்திய அரசைக் கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தார் பண்ருட்டி வேல்முருகன். அதன்படி நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் அவர் கிண்டியிலிருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் பேரணியாக கிளம்பினார். இருப்பினும் போலீஸார் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பண்ருட்டி வேல்முருகன் பேசுகையில், மத்திய அமைச்சர்களான சதானந்த கெளடா தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தரக் கூடாது என்று பேசுகிறார். கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்தியஅரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிரதமராக பதவி வகித்த தேவெ கெளடா தமிழகத்திற்கு ஒருசொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்கிறார். உண்ணாவிரதம் இருக்கிறார்.
இந்திய இறையாண்மைக்குப் புறம்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக சட்டசபையில் தீர்மானம் போடுகிறார்கள். இந்த அட்டூழியம், அநியாயம், அக்கிரமத்தை மத்திய அரசு தட்டிக் கேட்கவில்லை. கர்நாடகத்தைக் கண்டித்து எந்த கண்டனத்தையும் அது பதிவு செய்யவில்லை.
கர்நாடக மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கோடி தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பஸ்கள் எரிக்கப்பட்டன. வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல்லாயிரம் கோடி சேதமாகியும் பிரதமர் மோடி இரு மாநில மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். கொலை செய்தவன் ஒருவன், கொலையானவன் ஒருவன்.
ஆனால் இருவரையும் ஒரே தட்டில் வைத்து நிறுத்திப் பார்க்கும் மோடி அரசைக் கண்டிக்கும் வகையில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று கூறி விட்டு பின்னர் முடியாது என்று மறுத்து விட்டு, அரசியல் லாபத்திற்காக, குறுகிய கால அரசியல் லாபத்திற்காக அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்ட மத்தியஅரசின் நயவஞ்சக தமிழர் சட்டவிரோதப் போக்கை, தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கைக் கண்டிக்கும் வகையில் மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துகிறோம் என்றார் வேல்முருகன்.