புகையிலை வேறு புற்றுநோய் வேறு அல்ல... இரண்டும் ஒன்றுதான் : எம்.பி.க்கு டாக்டர் வி.சாந்தா பதிலடி
சென்னை: புகையிலை பயன்படுத்தினால் புற்றுநோய் வராது என்ற புகையிலை சட்டங்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் திலீப் குமார் காந்தியின் கருத்து முழுக்க முழுக்க தவறானது என சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடவேண்டும் என்ற முடிவு செய்தது. மத்திய சுகாதாரத்துறையின் இந்த முடிவு இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.
ஆனால், சிகரெட் பாக்கெட்டுகளில் பெரிய அளவில் எச்சரிக்கை செய்யும் படங்களை அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2003-ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பான சட்டப்பிரிவை ஆய்வு செய்த பாரதிய ஜனதா எம்.பி. திலீப்காந்தி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சுகாதார அமைச்சருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது.
அதில், ‘இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆராய்ச்சியும், புகையிலைப் பொருட்களால் புற்றுநோய் வரும் என்பதை உறுதிப்படுத்தவில்லை' எனத் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருபவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
திலீப் குமார் காந்தியின் அறிக்கை...
புகையிலை சட்டங்களை ஆய்வு செய்வதற்கான பாராளுமன்ற குழு தலைவர் திலீப் குமார் காந்தி ‘புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி உள்ளார். மேலும் புகையிலை விளைவிப்பதை தடை செய்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
தவறான கருத்து...
புகையிலை பயன்படுத்தினால் புற்றுநோய் வராது என்ற அவரது கருத்து முழுக்க முழுக்க தவறானது. டெல்லியில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் என்ற ஆராய்ச்சி நிறுவனமும், அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையும் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறோம். இது தொடர்பாக 65க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதன் பயனாகத்தான் புற்றுநோய் வந்தவர்களில் 40 சதவீதத்தினர் புகையிலை பயன்படுத்தியவர்கள்தான் என்பது தெரியவந்துள்ளது.
புள்ளி விபரப்படி...
இந்தியாவில் புகையிலை பொருட்களை பயன்படுத்தியதால் வருடத்திற்கு 10 லட்சம்பேர் இறக்கிறார்கள். தமிழ்நாட்டில் 55 ஆயிரம் பேர் சாகிறார்கள். தமிழ்நாட்டில் 5800 புதிய புற்றுநோயாளிகள் வருடத்திற்கு வருகிறார்கள். பீடி பிடிப்பதால் வாயின் ஓரத்தில் புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய் வந்தவர்களில் 40 சதவீதத்தினர் புகையிலை பயன்படுத்தியவர்கள் என்ற புள்ளிவிவரம் கிடைத்துள்ளது.
எச்சரிக்கை படங்கள்...
நுரையீரல் புற்றுநோய் புகை பிடிப்பவர்களுக்கே வருகிறது. புகையிலை பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என்று வாசகம் எழுதினால் அது படித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதுவும் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. இதை படிக்காத பாமரர்கள் படித்து பார்க்காமல் புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். எனவே புற்றுநோய் பற்றிய படங்களை புகையிலை பொருட்களின் மீது சுற்றப்பட்ட தாளில் அல்லது கவரில் அச்சிட்டால் நல்லது.
வேதனை...
குறிப்பாக அந்த விளம்பரம் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக உயர்த்த இருந்தது. ஆனால் அது உயர்த்தப்படவில்லை. மாறாக இப்படி எம்.பி. திலீப்குமார் காந்தி கூறியிருப்பது வேதனை தருகிறது. அமெரிக்காவில் 20 வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்தினர் என்ற நிலை இருந்தது. ஆனால் அங்கு விழிப்புணர்வு ஏற்பட்டதால் நிறையபேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர். புதிதாக பயன்படுத்துவோரும் குறைந்துவிட்டனர். அதனால் அமெரிக்காவில் இப்போது 40 சதவீதம் என்பது 20 சதவீதமாக குறைந்துவிட்டது.
இரண்டும் ஒன்று தான்...
எனவே யாரும் புகையிலை பொருட்களை பயன்படுத்தவேண்டாம். பீடியும் குடிக்கவேண்டாம். ஏனென்றால் பீடி குடித்தாலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு. புகையிலை வேறு புற்றுநோய் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்பேன்' என்றார்.