இப்போதாவது, விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவாரா?
சென்னை: குட்கா ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை டெல்லி சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளதால் அவரது பதவி பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மாதவரத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக ஒரு குடோனில் சோதனையிட்ட போது அங்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவது தெரியவந்தது.
அப்போது அங்கிருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அந்த குட்கா குடோனின் உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 3 பேரிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய யார் யாருக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்கள் காணப்படுகின்றனர்.
அதில் இன்னாள் டிஜிபி ராஜேந்திரன், ஓய்வு பெற்ற காவல் துறை ஆணையர் ஜார்ஜ், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணை தொடங்கியது.
இதையடுத்து இன்றைய தினம் ஜார்ஜ், ராஜேந்திரன், ரமணா, விஜயபாஸ்கர் உள்பட 40 இடங்களில் ரெய்டு நடைபெற்றது. ஏற்கெனே மருத்துவக் கல்லூரிகள், பாரா மெடிக்கல் கல்லூரி, செவிலியர் நியமனம் என இவற்றுக்கெல்லாம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வருமான வரித் துறையினர் தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் விஜயபாஸ்கர் வசமாக சிக்கியுள்ளதால் அவரை டெல்லி கொண்டு சென்று விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இனியும் விஜயபாஸ்கர் விவகாரத்தில் தமிழக முதல்வர் அமைதி காக்க முடியாததால் அவரது பதவி பறிக்கப்படும் என்ற தகவல் எழுந்துள்ளது.
எனவே டெல்லிக்கு அழைத்து செல்லும் முன் விஜயபாஸ்கர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்றே தெரிகிறது.