அமீத் ஷாவை சந்திக்கவில்லையாம் விஜயகாந்த்... மண்டபத்திலிருந்து விருட்டென்று கிளம்பிச் சென்றதாக தகவல்!
சென்னை: சென்னை வந்த பாஜக தலைவர் அமீத் ஷாவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் ஷாவைச் சந்திக்காமல் திருமணத்திற்கு வந்த அதே வேகத்தில் கிளம்பிப் போய் விட்டதாக இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.
அமீத் ஷா இன்று சென்னை வந்தார். ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத் திருமணத்திற்காக அவர் சென்னை வந்தார். இந்தத் திருமண விழாவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் இன்று வந்திருந்தனர்.
அப்போது இவர்கள் இருவரிடமும் அமீத் ஷா ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இந்த சந்திப்பின்போது, ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கு பாஜகவுக்கு ஆதரவு தருமாறு விஜயகாந்த், அன்புமணியிடம் ஷா கோரிக்கை வைத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வேறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. காலை 9.45 மணியளவில் வந்தார் அமீத் ஷா. 11.30 மணி வரை திருமண மண்டபத்தில் இருந்தார். அந்த நேரத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வந்தார். அவர் அமித்ஷாவுடன் கைகுலுக்கி பேசினார். பின்னர் அமித்ஷா சாப்பிட சென்றார்.
அந்த நேரத்தில் விஜயகாந்த் திருமண மண்டபத்துக்கு வந்தார். வந்தவர் மேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் விருட்டென்று அங்கிருந்து கிளம்பி வெளியேறிப் போய் விட்டாராம். ஷாவை அவர் சந்தக்கவில்லையாம்.
ஷாவைச் சந்திக்காமல் விஜயகாந்த் பொசுக்கென்று கிளம்பி போய் விட்டதாக கூறும் பாஜகவினர், இதுகுறித்து அதிருப்தியும் அடைந்துள்ளனராம்.
பாஜக ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக ஏற்கனவே கூறி விட்டது. பாமக போட்டியிடாது என்பது தெளிவாகத் தெரிந்ததுதான். அதேசமயம்,
தேமுதிக நிலைப்பாடு இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. போட்டியிடுவார்களா, இல்லையா, யாருக்காவது ஆதரவு தெரிவிப்பார்களா என்பது குழப்பமாகவே உள்ளது. அக்கட்சியினருக்கே கூட இதில் தெளிவில்லாத நிலைதான்.
இந்த நிலையில் திருமண வீட்டிற்கு வந்த அமீத் ஷாவை விஜயகாந்த் சந்திக்காமல் போய் விட்டதால் ஸ்ரீரங்கம் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற குழப்பம் தொடர்கிறது....!