கருணாநிதி சொன்ன ‘குச்சி’ கதைக்கு செக்!: எங்களை தேடி நீங்க வாங்க விஜயகாந்த் அழைப்பு
சென்னை: அதிமுகவை வீழ்த்த எதிர்கட்சிகளை ஒன்றாக சேர்த்து மெகா கூட்டணி அமைக்கவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி ஆசைப்பட்டாலும், அதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒத்து வருவதாக தெரியவில்லை. உங்கள் தலைமையை ஏற்று உங்களின் பின்னால் நாங்கள் வந்தது போதும், என் தலைமையை ஏற்று நீங்கள் வரக் கூடாதா என்கிற ரீதியில் பேசியுள்ளார் விஜயகாந்த்.
விஜயகாந்தின் இந்த பேச்சுக்கு காரணம் இல்லாமல் இல்லை. சில தினங்களுக்கு முன்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கருணாநிதி, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறி விடக்கூடாது என்று சொல்லப்படுவது நல்ல எண்ணம் தான். ஆனால் எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் தான் வரும் தேர்தலில் அ.தி.மு.கவை வீழ்த்த முடியும் என்று சொல்லப்படுவதை என்னால் ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.
அ.தி.மு.க. ஒன்றும் இமாலய உயரத்தில் இல்லை. 1996 தேர்தலில் 27 சதவீத வாக்குகள் பெற்ற போதும், 2006 தேர்தலில் 33 சதவீத வாக்குகள் பெற்ற போதும், அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட்டதை மறந்து விடக்கூடாது என்று கூறிய அவர், 1996 தேர்தலில் தி.மு.க. 53 சதவீத ஓட்டுக்களை பெற்றது. 2006 தேர்தலில் தி.மு.க.வுக்கு 45 சதவீத ஓட்டுக்கள் கிடைத்தது என்று கூறிய கருணாநிதி, கதை ஒன்றை கூறினார்.
கருணாநிதி சொன்ன குச்சி கதை
வயதான ஒருவருக்கு 4 மகன்கள் இருந்தனர். அந்த 4 மகன்களும் ஒருவருக்கொருவர் சண்டை போட்ட படி இருந்தனர். இதை கண்டு வயதானவர் மிகவும் கவலைப்பட்டார்.
ஒற்றுமையாக இருங்கள் என்று அவர் பல தடவை சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்த வயதானவர், தன் 4 மகன்களுக்கும் ஒரு போட்டி வைத்தார்.
அவர் 4 மகன்களிடம் தனிதனியே குச்சி எடுத்து வர உத்தரவிட்டார். அவர்கள் ஆளுக்கொரு குச்சி எடுத்து வந்தனர். அந்த குச்சிகளை ஒன்றாக கட்ட சொன்னார். பிறகு அந்த குச்சிகளை ஒவ்வொருவராக அழைத்து உடைக்க சொன்னார். யாராலும் குச்சிகளை உடைக்க முடியவில்லை.
பிறகு அவர் குச்சிகளை கட்டி வைத்திருந்த கட்டை அவிழ்த்து விட்டு குச்சிகளை தனித்தனியாக எடுத்து கொடுத்து உடைக்க சொன்னார். மறுநிமிடம் 4 குச்சிகளையும் அவர்கள் மிக, மிக எளிதாக உடைத்து விட்டனர். அதன்பிறகே 4 மகன்களும் ஒற்றுமையாக இருப்பதன் சிறப்பை புரிந்து கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளும் இதை புரிந்து கொண்டால் சரி. இந்த கதையை எதிர்கட்சிகளுக்கு சொன்னாரா அல்லது எதிரும் புதிருமாக இருக்கும் தன்னுடைய மகன்களுக்குச் சொன்னாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
விஜயகாந்த் ரியாக்சன்
இது ஒருபுறம் இருக்க திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் விஜயகாந்த். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் மக்களுக்காக மக்கள் பணி நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளையும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க எத்தகைய தியாகத்தையும் செய்வேன்.
தேமுதிகவும், மதிமுகவும் நம்ம கூட்டணிக்கு வந்து விடும் என்று கருணாநிதி கூறி வருகிறார். இது கனவுதான்... ஏன் நாங்கதான் உங்க பின்னாடி வரணுமா? நீங்க வரக்கூடாதா? 5 வருஷம் முதலமைச்சரா இருந்திருக்கீங்களே.. உங்க பின்னாடி வந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு அது அந்தக்காலம். இப்போ நீங்கதான் இறங்கி வரணும் என்று விஜயகாந்த் பேசவே கூட்டத்தில் விசில் பறந்தது.
இதுபோன்ற கூட்டங்களில் திமுகவை பிரேமலதா மட்டுமே வசைபாடி வந்தார். இப்போதோ விஜயகாந்தும் பேச ஆரம்பித்துள்ளது மக்கள் நலக்கூட்டணியை நோக்கி விஜயகாந்த் நகர ஆரம்பித்து விட்டார் என்பதையே இது காட்டுகிறது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.