எங்களுக்காக குரல் கொடுத்ததுக்கு நன்றி.. திமுக, காங்.குக்கு நன்றி சொன்ன சட்டசபைக்கே வராத விஜயகாந்த்!
சென்னை: சட்டசபையில் தேமுதிகவுக்கு ஆதரவு தெரிவித்து வெளிநடப்பு செய்த திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட உறுப்பி மனப்பூர்வ நன்றி தெரிவித்துக் கொள்வதாக தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் தேமுதிக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை எதிர்த்தும் தேமுதிக உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும், திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம், கம்யூனிஸ்ட் கட்சியினர் குரல் கொடுத்தனர். வெளிநடப்பிலும் ஈடுபட்டனர். இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெளியேற்ற உத்தரவு
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கடந்த 19ஆம்தேதி ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் பேசிக்கொண்டிருந்த போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் குறுக்கிட்டு அவர் பேசிய பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும்படியும், அவையில் இருந்து அவரை வெளியேற்றும்படியும் வலியுறுத்தினார்கள்.
சட்டசபையில் தீர்மானம்
அதை ஏற்றுக்கொண்ட பேரவை தலைவர் மோகன்ராஜையும் அனைத்து தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர்களையும் வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் தே.மு.தி.க உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பேரவை தலைவர் அதை அவையில் அறிவித்தார்.
ஜனநாயகப் படுகொலை
சட்டமன்றத்தில் ஜனநாயக ரீதியில் மக்களின் கோரிக்கைகளை எழுப்ப முற்படுகின்றபோதெல்லாம் அமைச்சர்கள் இடைமறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்து ஜனநாயக படுகொலையில் தொடர்ந்து ஈடுபடுகின்றார்கள். ஆளுங்கட்சியினரின் இந்த ஜனநாயக விரோதப் போக்கையும், பேரவை தலைவரின் ஒருதலைபட்சமான நடவடிக்கையையும் கண்டித்து நான் அறிக்கை விட்டேன்.
மக்களின் முடிவு
அதுமட்டுமல்லாமல், அவையில் நடந்ததாக சொல்லப்படும் ஒரு பிரச்சனைக்கு, முதலில் எதிர்க்கட்சி துணைத்தலைவரையும், இரண்டாவதாக அனைத்து தே.மு.தி.க உறுப்பினர்களையும் வெளியேற்றியதோடு, கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம், அவை உரிமை மீறல், காவல் துறையால் வழக்குப்பதிவு என தொடர் நடவடிக்கைகளை தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எடுப்பது அவை மரபாகுமா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.
நன்றி… நன்றி..
தே.மு.தி.க. உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும், மக்கள் நலனுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து பணியாற்ற தே.மு.தி.க. உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்குமாறும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததோடு, வெளி நடப்பிலும் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தே.மு.தி.க. சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.