ஆயிலை கிளின் செய்ய ஆள் வேணும்… சுற்றுச்சூழல் அமைப்பு மாணவர்களுக்கு அழைப்பு
கடலில் கொட்டிய டீசல் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவியுள்ளது. இதனை அகற்றவும் கடற்கரையை சுத்தம் செய்யவும் தன்னார்வலர்கள் தேவை என்று சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று விளம்பரம் செய்துள்ளது.
சென்னை: கடலில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றவும் கடற்கரையை தூய்மை செய்யவும் மாணவர்கள், இளைஞர்கள் வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று விளம்பரம் செய்துள்ளது.
கடந்த 27ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகில் கப்பல் இரண்டு மோதிக் கொண்டதில் கப்பலில் கொண்டு வரப்பட்ட கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த எண்ணெய் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவி கடலோரப் பகுதிகள் மாசடைந்துள்ளன. எண்ணெய் பரவிய பகுதிகளில் அரசு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். மேலும், அந்தந்த பகுதி மீனவர்கள் தாமாக முன்வந்து கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று, சென்னையில் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தனியார் துறையில் வேலை பார்ப்போர் என அனைவரையும் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த அழைப்பில் கடலில் பரவி வரும் எண்ணெய்யை அகற்ற அரசுக்கு உதவி செய்ய தன்னார்வலர்களாக வருமாறு கூறப்பட்டுள்ளது. விருப்பம் இருப்பவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அடுத்த 3 நாட்கள் வேலை செய்யக் கூடிய வகையில் தயாராக வருமாறும், அப்படி வருபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலம் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பை பார்த்து எண்ணெய்யை அகற்றும் பணியை செய்ய விரும்புவோர் 9677097824 என்ற எண்ணை தொடர்பு கெள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.