கொடூரமான 'வியாபம்' ஊழல் மர்ம மரணங்களை போல நீடிக்கும் கொடநாடு கொலைகள்
இந்தியாவின் கொடூர வியாபம் ஊழல் மர்மமரணங்கள் போல கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மரணமடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை சம்பவங்களைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளின் மர்ம மரணங்கள் இந்தியாவின் கொடூர வியாபம் ஊழல் மர்ம மரணங்களை நினைவூட்டுவதாக உள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியம் (வியாபம்) நடத்தி வந்த நுழைவுத்தேர்வில், பெருமளவு ஊழல் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தேர்வு வாரியத்தில் ஏராளமானோர் பணம் கொடுத்து வேலை பெறுவதாக புகார் எழுந்தது.
இந்த ஊழலில் பல்வேறு அரசியல் தலைவர்கள், வியாபாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த, ஐகோர்ட்டு சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்தது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் என சுமார் 40க்கும் மேற்பட்டோர், மர்மமாக மரணமடைந்தனர். இந்தியாவின் கொடூரமான ஊழல் என வியாபம் ஊழலுக்கு பெயரிட்டனர்.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவு காவலாளி ஓம்பகதூரை கொன்று விட்டு பங்களாவில் இருந்த பொருட்களை 11 பேர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது போயஸ் தோட்டத்தில் கார் டிரைவராக பணியாற்றிய கனகராஜ்தான். அவரது நண்பரான கோவையை சேர்ந்த சயன் அவரது நண்பர் சஜீவன் ஏற்பாட்டின் பேரில் கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் இந்த கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
கொலை, கொள்ளை, விபத்து
கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி ஓம் பகதூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மற்றொரு காவலாளி இப்போது படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொடநாடு கொள்ளையின் மூளையாக செயல்பட்ட டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கார் மோதி விபத்தில் பலியானார். இது விபத்தா? கொலையா என்ற விசாரணை நடைபெறுகிறது.
தொடரும் பலிகள்
கனகராஜின் நண்பரான சயன், அவரது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் காரில் கேரளாவுக்கு தப்பிச் சென்ற போது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கினார். வினுப்பிரியா, நீது ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த சயன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சயனுக்கும் ஆபத்து
கொடநாடு எஸ்டேட் பங்களாவின் உள் அலங்கார வேலைகளைச் செய்த சஜீவன் என்பவரின் அசிஸ்டெண்ட்தான் சயன். இருவருக்குமே அறையின் அனைத்து பகுதிகளும் அத்துபடி, சயனின் காரில் இருந்து ஜெயலலிதாவின் வாட்ச்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஆவணங்கள், பணம் பற்றி எந்த விபரத்தையும் போலீஸ் வெளியிடவில்லை. எனவே சயன் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவே கூறப்படுகிறது.
ரகசிய வாக்குமூலம்
சயன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு கோவை ஜே.எம்.எண் 5 மாஜிஸ்திரேட் செல்வக்குமார் நேரில் சென்று விபத்து தொடர்பாக வாக்குமூலம் பெற்றார். இவரது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்பதால் கொலை வழக்கு தொடர்பாக ரகசிய வாக்குமூலம் பெற்றதாக தெரிகிறது. இந்த வாக்குமூலம் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.
பின்னணியில் யார்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் வியாபம் போன்றே அடுத்துடுத்து மரணங்கள் நடந்து வருவதால் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் யாரோ இருக்கிறார்கள் என்றும் அவர்களை காப்பாற்றவே போலீசார் முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிபிஐ விசாரணை
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கனகராஜ் மரணமடைந்ததால் சாதாரண கொள்ளை வழக்காக பதிவு செய்து கனகராஜ் மீது பழியை போட்டு வழக்கை முடிக்க பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.