வாட்ஸ்அப் காலத்தில் வழக்கொழிந்துபோன பொங்கல் வாழ்த்து அட்டைகள்!
சென்னை: வாட்ஸ்சப் காலத்தில் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் மறைந்துவிட்டது, நடுத்தர வயதினருக்கு பெரும் மனக்குறையாக உள்ளது.
தீபாவளி என்றதும் பட்டாசு, இனிப்பு பண்டங்கள் எப்படி நமது நினைவுக்கு வருமோ, அதைப்போன்று, பொங்கல் என்றதும், கரும்போடு சேர்த்து நினைவுக்கு வருவது வாழ்த்து அட்டைகள்தான்.
1990களில் இந்த வாழ்த்து அட்டைகள் இல்லா பொங்கலை நினைத்து பார்க்க முடியாது., போஸ்ட்மேன் எப்போது வருவார் என பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்கள் முன்பிருந்தே வழி மீது விழிவைத்து காத்திருப்பார்கள் மக்கள்.
செல்வாக்கு
ஒரு வீட்டுக்கு எத்தனை வாழ்த்து அட்டைகள் வருகிறதோ அதை பொறுத்து அவரது செல்வாக்கும் கணக்கிடப்படுவது கிராமப்புற வழக்கமாக இருந்தது.
ஆத்ம திருப்தி
நமது சொந்த கையெழுத்திட்டு, கவிதை என நினைத்து எதையாவது கிறுக்கி அனுப்பப்படும் வாழ்த்து அட்டைகளில்தான் என்ன ஒரு ஆத்ம திருப்தி. எழுத்தோடு சேர்ந்து, நாமும் சேர வேண்டிய இடத்துக்கு பயணிப்பதை போன்ற உணர்வை வாழ்த்து அட்டைகள் கொடுத்தன.
தேர்ந்தெடுக்க மெனக்கெடுதல்
விதவித டிசைன்கள், படங்கள் போன்றவற்றை கடைகளில் தேடி எடுத்து வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டதால் அதில் ஒரு ஆத்மார்த்த அன்பும் கலந்திருந்தது. எவ்வளவு ரூபாயில் வாழ்த்து அட்டை அனுப்பப்படுகிறது என்பதை கொண்டு, அந்த நபரின் பண வளம் மட்டுமின்றி, பாசமும் அளவிடப்பட்டது.
எஸ்.எம்.எஸ்சால் முதல் அடி
செல்போன்கள் அறிமுகமான 2000க்கு பிறகு செல்போன் எஸ்.எம்.எஸ் மூலமாக வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டபோது வாழ்த்து அட்டை நடைமுறைக்கு முதல் அடி விழுந்தது. இ-மெயிலில் பிடித்த படங்களை அனுப்ப தொடங்கியபோது, அடுத்த அடியும் விழுந்தது.
வாட்ஸ்சப் யுகம்
இன்று செல்போன்களில் இணையமும் இணைந்துவிட்ட சூழலில், வாட்ஸ்சப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வாழ்த்து அட்டையின் இடத்தை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டன. இணையத்தில் வித்தியாசமான மெசேஜ், படங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை, அனுப்பிவிடுவதோடு கடமையை முடித்துக்கொள்கிறார்கள் இன்றைய தலைமுறையினர்.
இயந்திரத்தனம்
நேரமும், செலவும் மிச்சம் என்றாலும், நமக்கானவர்களுக்கு, நமது கைப்பட எழுதி அனுப்பிய வாழ்த்துக்களின் சுவையை, இயந்திரத்தனமான வாட்ஸ்அப்புகள் தருவதில்லை என்பது ஒரு நிமிடம் கண்மூடி யோசிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.