ஒன் மேன் ஆர்மியாக சட்டசபைக்கு வருவாரா விஜயகாந்த்?
சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தேமுதிக எம்.எல்.ஏக்களை அனுமதிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். சபாநாயகர் தனபால் தேமுதிக உறுப்பினர்களை அனுமதிப்பாரா? அல்லது எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் ஒன் மேன் ஆர்மியாக வந்து சட்டசபையில் குரல் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசுத்துறைகள் தொடர்பான மானிய கோரிக்கைகளை விவாதித்து நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வருகிற 24ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு குறைவாகவே இருப்பதால் இந்த கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சிகள் தயார்
சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. முக்கியமாக மது விலக்குப் பிரச்சினையை விஸ்வரூபமாக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
தேமுதிக எம்.எல்.ஏக்கள்
இந்தக் கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தேமுதிகவுக்கு ஒரு முக்கிய சிக்கல் உருவாகியுள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதால் கூட்டத்தொடரில் யாரும் இதில் கலந்து கொள்ள முடியாது. எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் மட்டுமே சட்டசபைக்கு வர முடியும்.
சபாநாயகர் நடவடிக்கை
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் தேமுதிக. எம்.எல்.ஏ.க்கள் விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி அவர்களை கூட்டத்தொடர் முழுவதும் நீக்கி வைத்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அந்த கூட்டத்தொடர் இன்னும் முடித்து வைக்கப்படவில்லை. எனவே தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் இந்த சட்டசபை கூட்டத்திலும் பங்கேற்க முடியாது.
ஒன் மேன் ஆர்மி
கடந்தக் கூட்டத்தின்போது விஜயகாந்த் சபையில் இல்லை. எனவே அவருக்குத் தடை பொருந்தாது. அவருக்குத் தடை விதிக்கப்படவும் இல்லை. எனவே அவர் மட்டுமே ஒன் மேன் ஆர்மியாக 24ம் தேதி தொடங்க உள்ள சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
இதனிடையே தேமுதிகவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அதிமுக ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் வருவதற்கு எந்த தடையும் இருக்காது.
நடவடிக்கை ஏன்?
கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதற்காக தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகனை மற்ற தேமுதிக எம்.எல்.ஏக்கள் தாக்க முயற்சித்தனர். இதை மற்றொரு தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தடுக்க முயன்றார். இதனால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
6 தேமுதிக எம்.எல்.ஏக்கள்
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏக்கள் முருகேசன், அருள்செல்வன், செந்தில்குமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, கொறாடா சந்திரகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி சட்டசபையின் உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஓராண்டு சஸ்பெண்ட்
இதைத் தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சட்டசபையில் உரிமைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேரும் தமிழக சட்டசபையில் இருந்து ஓராண்டு காலத்துக்கு சஸ்பென்ட செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
6 மாதமாக குறைப்பு
இதற்கு தேமுதிக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இதைத் தொடர்ந்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரைப்படி அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம் தண்டனைக் காலத்தை 6 மாத காலமாகக் குறைத்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
தேமுதிக உறுப்பினர் கூச்சல்
இந்த ஆண்டு தொடங்கிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரில், சிட்டிசன் என்ற வார்த்தையை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜ் என்பவர் 'குடிமகன்' என்று மொழிபெயர்த்து கூறினார். இதற்கு தே.மு.தி.க., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜெயலலிதா பற்றி கருத்து
பிப்ரவரி, 19ம் தேதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., மோகன் ராஜ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியதற்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றும்படி, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபை காவலர்கள், அவர்களை வெளியேற்றியபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.சட்டசபை லாபியிலும், தள்ளுமுள்ளு தொடர்ந்தது. இதில், சபை காவலர் ஒருவர் காயமடைந்தார்.
19 பேரும் சஸ்பெண்ட்
இச்சம்பவத்தை தொடர்ந்து, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், 19 பேரை, கூட்டத் தொடர் முடியும் வரை, 'சஸ்பெண்ட்' செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார்.
தேமுதிக உறுப்பினர்கள் மோகன்ராஜ், சந்திரகுமார் ஆகியோர் அடுத்த கூட்ட தொடரில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 எம்.எல்.ஏக்களுக்கு தடை நீடிப்பு
சட்டசபையில் மார்ச் 31ம்தேதியன்று அறிக்கை ஒன்றினை வாசித்த சபாநாயகர் தனபால்,தே.மு.தி.க.,வை சேர்ந்த சந்திரகுமார், மோகன்ராஜ், பார்த்திபன், வெங்கடேசன், சேகர், தினகரன், ஆகியோர், அடுத்த கூட்டத்தொடர் துவங்கி, 10 நாட்களுக்கு, சபை நடவடிக்கையில் இருந்து நீக்கப்படுகின்றனர். இக்காலத்தில், அவர்கள் எம்.எல்.ஏ.,க்கள் என்ற முறையில் வழங்கப்படும் ஊதியம், பிற ஆதாயம் மற்றும் சலுகைகளை பெற இயலாது என்று தெரிவித்தார்.
சட்டசபை வரமுடியாது
சட்டசபை தீர்மானத்தின்படி, தண்டனை விதிக்கப்பட்ட, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரும், இந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. அடுத்த கூட்டத் தொடர், மழைகால கூட்டத் தொடராக, அதிகபட்சம், ஐந்து நாட்கள் நடைபெறும். அதன்பின் அடுத்த ஆண்டு, ஆளுநர் உரை மீதான விவாதம் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் நடைபெறும். இவையும், ஓரிரு நாட்களே நடைபெறும் என்பதால், அவர்கள் சபையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.
தண்டனை ரத்தாகுமா?
அடுத்த ஆண்டு, சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், மீண்டும் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று, சபைக்கு வரலாம். அல்லது தண்டனை ரத்து செய்யப்பட்டால், சபைக்கு வர முடியும். இதனிடையே 6 பேர் தவிர கடந்த பிப்ரவரி மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் வரமுடியாத சூழ்நிலை உள்ளதால் இன்று நடந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் தேமுதிக எம்.எல்.ஏக்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்கட்சியினர் முன்வைத்துள்ளனர்.
சிங்கம் போல வருவாரா?
சட்டசபைக்கு வருவேன், வரும்போது வருவேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். எனவே 24ம் தேதி அவர் சிங்கிளாக, சிங்கம் போல வருவாரா? வந்து ஆளும் கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எதிர்கட்சியினரிடையே மட்டுமல்ல ஓட்டுப்போட்ட மக்களிடையேயும் எழுந்துள்ளது.