இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த பெண் பலி: ரத்த காயங்களுடன் தப்பியோடிய வாலிபர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நேரம் ரத்த காயங்களுடன் தப்பியோடிய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை கல்யாணராமபுரத்தில் ஒரு மாடிக் குடியிருப்பில் முதல் மாடியில் கார்த்திகாதேவி (40) என்பவர், தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் அரசு ஊழியர். குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில் புதன்கிழமை மாலை திடீரென கார்த்திகாதேவி 2 வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த நேரத்தில் அதே வீட்டில் 2 வது மாடியில் குடியிருந்த அசன்முகமது அடுத்த வீதி வழியாக ரத்த காயத்துடன் ஓடிய போது பிடிபட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்திகா தேவியை மர்ம நபர் கீழே தள்ளிவிடும் போது நான் தடுக்கச் சென்றேன். அப்போது அந்த நபர் என்னையும் கத்தியால் குத்திவிட்டு ஓடியதாக கூறினார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்திய போது, அப்பகுதியில் உள்ளவர்கள் வேறு யாரும் அந்தப் பக்கம் வந்ததாக தெரியவில்லை என்கின்றனர்.
இதனால் அசன்முகமதுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.