நெல்லை: எட்டி உதைத்ததால் இடிந்து விழுந்த பள்ளி சுவர்? 3 மாணவர்கள் பலியான சம்பவத்தின் பரபர பின்னணி!
நெல்லையில் தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி: தனியார் பள்ளி கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினரும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
நெல்லை டவுன் பகுதியில் உள்ள சாப்ஃடர் மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்போது பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளியில் காலை 11 மணியளவில் மாணவ, மாணவிகளுக்கு இடைவேளை விடப்பட்டுள்ளது. அப்போது கழிப்பறைக்கு மாணவர்கள் மொத்தமாக சென்றனர். திடீரென கழிப்பறை சுற்றுச்சுவர் பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் சில மாணவர்கள் மீது சுவர் விழுந்து அமுக்கியது.
நெல்லையில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன், தொப்பென சரிந்து விழுந்த பள்ளிக்கூட சுவர்.. 3 மாணவர்கள் பலி
சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.
தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3 மாணவர்கள் காயங்களுடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிதறி ஓடிய மாணவர்கள்
நெல்லை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்தவுடன் ஆங்காங்கே அனைவரும் சிதறி ஓடினர் அனைத்து மாணவர்களையும் வகுப்பறைக்கு வர சொல்லி யார் இல்லை என்பது குறித்து கணக்கெடுக்க கூடிய பணியை பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோர்களுக்கு தகவல்
பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் பணியில் பள்ளி நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
கோபத்தில் மாணவர்கள்
கழிப்பறை சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து ஏராளமான மாணவர்கள் மிகுந்த கோபத்துடன் பள்ளியின மீது கற்களை கொண்டு வீசினர், பள்ளியில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தினர். இதனையடுத்து தற்போது 8 மற்றும் 9ஆம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வலுவிழந்த சுவர்
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து குறித்து பேசிய சில மாணவர்கள், இடைவேளை நேரத்தில் சிலர் சுவரை பலமாக எட்டி உதைத்த காரணத்தாலேயே சுவர் உடைந்ததாக கூறியுள்ளனர். விபத்து குறித்து பேசிய மற்றொரு மாணவர், சுவர் வலுவிழந்தே இருந்தது. அது சரியாக கட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.