போதை மறுவாழ்வு மையத்தில் நோயாளிகளுக்கு அடி, உதை.. சங்கிலியால் கட்டி கொடுமை.. காவலர் மர்ம மரணம்
திருச்சி: போதை மறுவாழ்வு மையத்தில் நோயாளிகளை அடித்து துன்புறுத்தியும் அவர்களை சங்கிலியால் கட்டி வைத்தும் கொடுமை செய்த நிலையில் அங்கு சேர்ந்த 3-ஆவது நாளில் காவலர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
மது, போதை வஸ்துகளை பயன்படுத்திவிட்டு அதற்கு அடிமையானோருக்கு சிகிச்சை அளித்து அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதுதான் மறுவாழ்வு மையங்களின் பணியாகும். இது போன்ற மையங்கள் ஏராளமாக உள்ளன.
இந்த நிலையில் திருச்சி கே கே நகரில் தனியார் போதை மறுவாழ்வு மையம் இயங்கி வந்தது. இந்த மையத்தில் குடிக்கு அடிமையானவர்களை சேர்த்துள்ளனர். உணவு கட்டணம், தங்கும் இடம் கட்டணம் என ஒரு குறிப்பிட்ட தொகையை நோயாளிகளின் உறவினர்களிடம் இந்த நிறுவனத்தினர் பெற்றுக் கொண்டனர்.
வேலை இழப்பு
இந்த நிலையில் பெண்ணாடத்தை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன். இவர் குடிக்கு அடிமையானவர். இவர் குடித்து விட்டு பணியில் இருந்ததால் அவ்வப்போது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டார். இந்த நிலையில் அப்படியும் திருந்தாததால் இவரது வேலையை இழக்க நேரிட்டது.
மையத்தில்
இதையடுத்து அவரை திருத்துவதற்காக அவரது குடும்பத்தினர் இந்த திருச்சி மறுவாழ்வு மையத்தில் கொண்டு போய் சேர்த்தனர். இவரை சேர்த்த 3ஆவது நாளான இன்று இவர் மர்மமான முறையில் அந்த மையத்தில் இறந்து கிடந்தார். இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கின்றனர்.
மக்கள் மீட்பு
இதையறிந்து அந்த இடத்துக்கு பொதுமக்கள் கூடினர். பின்னர் அந்த மையத்தில் உள்ளே சென்று பார்த்த போது அங்கு ஏராளமானோர் இரும்பு கம்பிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்தவர்களை அந்த மக்கள் மீட்டனர்.
உறவினர்கள்
இதில் மறுவாழ்வு மைய ஊழியர்கள் நோயாளிகளை அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. அவர்கள் உடலில் ஏராளமான தழும்புகள் காணப்பட்டன. மேலும் உணவு கட்டணத்தை பெற்று கொண்டு நோயாளிகளுக்கு வெறும் கஞ்சியையே வழங்கி வந்ததும், இவர்களை பார்க்க வரும் மருத்துவர்களிடமும் உறவினர்களிடமும் இந்த கொடுமையை சொல்லக் கூடாது என மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பந்தபட்டவர்களை தேடி வருகின்றனர்.