முத்தலாக்.. அதிமுக டபுள் ஆக்ட்... கொள்ளையடிக்கவே உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு.. காதர் மொகிதீன்
திருச்சி: தமிழக அமைச்சர்கள் கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைத்து வருவதாகவும் முத்தலாக் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடத்துடன் செயல்படுவதாகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் திருச்சியில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. 6 பேரவைத் தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவாக 3 லட்சம் வாக்குகள் உள்ளன.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளதால், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். ஜூலை 31 (புதன்கிழமை) முதல் ஆக. 3-ஆம் தேதி வரை தொகுதி முழுவதும் நான் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.
கல்வி தனியார் மயம்
தமிழகத்தின் உணர்வுக்கு மதிப்பு அளிக்காமல் இட ஒதுக்கீட்டைப் புறக்கணித்து, சமூக நீதிக்கு இடம் அளிக்காமல் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கிறது. இந்த மசோதாவை அமலுக்கு கொண்டு வந்தால் கல்வி தனியார் மயமாகும். ஏழை, எளிய, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும்.
மசோதாவே தேவையில்லை
எனவே, வரைவுக் கொள்கையில் திருத்தங்கள் கொண்டுவரத் தேவையில்லை. ஒட்டுமொத்தமாக புதியக் கல்விக் கொள்கையையே திரும்பப் பெற வேண்டும்.தேசிய கல்விக் கொள்கை என்பது அனைத்து கட்சியினாலும் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாய் இருக்கிறது. எனவே தேசிய கல்விக் கொள்கை என்பது அது மாற்றத்துக்கு உட்பட்டது அல்ல முற்றிலுமாக அதை திரும்பப் பெற வேண்டும்,
முத்தலாக் மசோதா
முத்தலாக் தடை சட்டத்துக்கு மக்களவையில் ஒரு நிலைப்பாடு, மாநிலங்களவையில் ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடத்துடன் அதிமுக செயல்பட்டு வருகிறது. எந்த மதத்தின் சட்டத்தையும் மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரமில்லை.
உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு
தோல்வி பயம் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தி வருகிறது அதிமுக அரசு. உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும், மேலும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் நலத் திட்டம் என்ற பெயரில் நேரடியாக அரசு செய்வதாக கூறி அமைச்சர்கள் கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றனர். மேலும் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தான் சுகாதாரமாக அனைத்து இடங்களிலும் பார்க்க முடியும். நோய்களை தடுக்க முடியும்.
இஸ்லாமியர்கள் பாதிப்பு
'புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதைப் போல் புதிய கல்விக் கொள்கையை சீர்திருத்தம் செய்து தமிழ்நாட்டில் அமல்படுத்த முயற்சிக்கக் கூடாது. மாப் லின்சிங் (mob lynching) செயல்களால் இதுவரை 272 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 247 பேர் இஸ்லாமியர்கள். எனவே தனி நபர் மீதான தாக்குதல்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துவருகிறது" இவ்வாறு அவர் கூறினார்.