குதிரைகள் பூட்டப்பட்ட வாகனத்தில் ஜார்ஜ் பிளாய்டு "இறுதிப் பயணம்".. கண்ணீர் மல்க விடை கொடுத்த மக்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் படுகொலை செய்யப்பட்ட கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. மக்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.
கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு என்பவரை விசாரணைக்காக போலீஸ் அதிகாரிகள் 4 பேர் கடந்த 25-ஆம் தேதி அழைத்து சென்றனர். அப்போது அவரை ஒரு அதிகாரி முழங்காலால் பின்னங்கழுத்தை நெரித்தார்.
இதில் தன்னால் மூச்சு விட முடியவில்லை என கூறியும் விடாமல் அந்த அதிகாரி கழுத்தை நெரித்தார். பிளாய்டின் உடல் அசைவுகள் நின்றவுடன்தான் அவர் காலை எடுத்தார்.

சீர்திருத்தம்
காலம் காலமாக கருப்பினத்தவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டது. ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்டும், போலீஸ் சீர்திருத்தம் கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

நிகழ்ச்சி
தற்போதும் இந்த போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் இன்று ஜார்ஜ் தேவாலயத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி ஹூஸ்டனில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. தேவாலய பிரார்த்தனைக்கு பிறகு, அங்கிருந்து அவரது உடல் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

சாலையின் ஓரம்
இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலானோர் முகக் கவசம் அணிந்திருந்தனர், அவரது ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஊர்வலம் செல்லும் சாலையின் ஓரத்தில் சிலர் முழங்காலிட்டும் அஞ்சலி செலுத்தினர்.

பிரியாவிடை
அவரது இறுதி ஊர்வலம் பியர்லேண்ட் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் முடிவடைந்தது. அங்குள்ள ஜார்ஜின் தாயாரின் கல்லறைக்கு அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications