தடுப்பூசி எடுத்துக்கொண்டால்.. தீவிர கொரோனா பாதிப்பு நிச்சயம் ஏற்படாது.. அடித்து சொல்லும் புதிய ஆய்வு
வாஷிங்டன்: தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும்போது, அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதியாகும் சூழ்நிலை 94% வரை குறைவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனாவின் கோர தாண்டவம் உலக நாடுகளில் இன்னும் முடியவில்லை. தினசரி கொரோனா பாதிப்பு பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ரொக்கமாக கேட்ட ஆஸ்பத்திரி.. ஏடிஎம்மை தேடிய குடும்பம்.. பலியான இளம்பெண்.. ஆந்திராவில் சோகம்
அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இருப்பினும், பொதுமக்களில் ஒரு பகுதியினருக்குத் தடுப்பூசி பலன் தருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
94% வரை குறைகிறது
இந்நிலையில், அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வில் 65 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டால், அவர்கள் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதியாக வேண்டிய நிலை குறைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதைத் தாண்டிய ஒருவர், இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டிருந்தால் அவர் மருத்துவமனையில் அனுமதியாக வேண்டிய சூழ்நிலை 94% வரை குறைகிறது.
ஒரு டோஸ் எடுத்துக்கொண்டால்
அதேபோல ஒரு டோஸை மட்டும் எடுத்துக் கொண்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதியாக வேண்டிய நிலை 64% வரை குறைவதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பொதுவாக அதிகம் முதியவர்களே உயிரிழக்கிறார்கள். முதியவர்கள் உடல்நிலையில் ஏற்கனவே பாதிப்புகள் இருப்பதால், அவர்கள் எளிதில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. கொரோனா தடுப்பூசி அந்த அபாயத்தைக் குறைப்பது இந்த ஆய்வில் உறுதியாகியுள்ளது.
மற்றவர்களுக்குப் பரவாது
இதேபோல பிரிட்டன் நாட்டிலும் மற்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவுவதும் 38 முதல் 49% வரை குறைவாகவே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டால், அவர் தன்னைச் சுற்றி இருக்கும் நபர்களுக்குக் குறைவாகவே கொரோனாவை பரப்புகிறார்.
தடுப்பூசி செலுத்தும் பணிகள்
இந்த இரண்டு ஆய்வுகளும் தடுப்பூசி எவ்வளவு முக்கியம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இதன் காரணமாகவே பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது. பிரிட்டன் நாட்டில் சுமார் 3.3 கோடி பேருக்குக் குறைந்தது ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது அதேபோல அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 68% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி
மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. விரைவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.