Kaatrin Mozhi Serial: புகுந்த வீடு வரும் பெண் நெல் படியை காலால் எத்திவிட்டா வருவா?
சென்னை: அதென்னமோ தெரியலை புகுந்த வீட்டுக்குள் முதன்முதலாக அடி எடுத்து வைக்கும்போது, நெல் நிறைந்த படியை வலது காலால் ஒரு எத்து விட்டுட்டு உள்ளே வர்றாங்க. இது நம்ம பக்கத்து பழக்க வழக்கம் போல தெரியலையே....நம்ம பக்கத்துல வெறும் படியைக்கூட தரையில் வைக்க மாட்டாங்க. அதுல ரெண்டு அரிசி அல்லது நெல் போட்டுத்தான் படியை வைப்பாங்க.
தெரியாம யார் காலாவது படியில் பட்டுவிட்டால் கூட தொட்டு கும்பிட சொல்லுவாங்க. இதெல்லாம் படி பற்றிய கதை. அதை விடுங்க நம்ம பக்கத்துல புது மணப் பெண்கள் ஒன்னு நிறைநாழி என்று சொல்லக்கூடிய மரக்காலில் நெல்லை நிரப்பி, அதன் மேல் தட்டு வச்சு, அதில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வைத்து, அதை எடுத்துக்கொண்டு புகுந்த வீட்டுக்குள் புது மணப்பெண்கள் நுழைவார்கள்.
இன்னும் ஒரு சாராரின் பழக்கம், பூர்ண கும்பம் என்று சொல்லக் கூடிய, சொம்பில் தான்யம் அல்லது நீர் நிரப்பி அதில் காசு போட்டு, அதன் மேல் தேங்காயை குடுமி தெரியும்படி வைத்து, அதற்கு பூ, பொட்டு வைத்து இருப்பார்கள். அதை எடுத்துக்கொண்டு புதுமணப்பெண் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைப்பாள்.
நெல் நிரம்பிய படியை தள்ளிவிட்டு
இப்போது சீரியல்களில் புதுமணப் பெண்கள் புகுந்த வீட்டுக்குள் நுழையும்போது நெல் நிறைந்து இருக்கும் படியை வலது காலால் லேசாக எட்டித் தள்ளிவிட்டு உள்ளே நுழையற மாதிரி காட்சி வச்சு இருக்காங்க. பெண் பெரும் செல்வம்தான்... அவள் வீட்டுக்குள் நுழையும்போது அனைத்து செல்வங்களும் பெருக வேண்டும்தான்.. அதற்காக பெண்ணை விட பெரும் செல்வம் என்று போற்றத்தக்க நெல்லை.. உணவு தானியத்தை காலால் உதைக்கலாமா? அதை அளப்பதால்தான் படிக்கே பெருமை. அதைக் கூட காலில் பட விட மாட்டார் நம் வீட்டுப் பெரியோர்.
நிறை நாழி விளக்கு
நிறை நாழி பூர்ண கும்பம் இவைகளில் இல்லாத பெருமை படியில் நெல் வைத்து அதை காலால் தெத்துவதிலா இருக்கிறது? மரக்கால் அல்லது படி நிறைய நெல்லோடு அதில் விளக்கேற்றி வைத்து கையில் ஏந்தி வரும் நிறைநாழியை பெண்ணின் கையில் கொடுப்பதில் என்ன உங்களுக்கு செல்வம் குறைந்து விடுகிறது. எல்லார் வீடுகளிலும் இருக்கும் பழக்க வழக்கத்தை விடுத்து நீங்களாக ஒன்றை ஏன் புகுத்துகிறீர்கள்?
பூர்ண குமபம்
பூர்ண கும்பமும் ஒன்றும் குறைந்தது அல்ல.. மாவிலை அலங்கரிக்க, அதில் தேங்காய் வைத்து, அதற்கு பொட்டு பூ வைத்து மணமகள் கையில் கொடுக்கும் பூர்ண கும்பத்தில் வாழ்ககையின் தத்துவமே அடங்கி இருக்கிறது என்று சொல்வார்கள். இதை புது மணமகள் கையில் கொடுத்து வீட்டுக்கு அழைத்தால் என்ன செல்வம் குறைந்துவிடப் போகிறது? தானியங்கள் வீட்டில் சிதறக் கூடாது என்றும் பெரியவர்கள் சொல்வார்கள். எல்லாத்தையும் ஏட்டிக்குப் போட்டியாக செய்வதையே சீரியல் கதைக்குழு எழுத்தாளர்கள் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
விவசாயி இழுக்கு
பெண்ணை பெருமைப் படுத்துகிறேன் என்று அவர்களை சிறுமைப் படுத்துகிறீர்கள். எந்த ஒரு பெண்ணும் அவள் வீட்டில் படியை உதைக்க கூடாது. பீரோவில் கால் படக் கூடாது..தானியங்களை வீட்டில் சிதற விடக் கூடாது என்று கேட்டு கேட்டுத்தான் வளர்ந்து இருப்பார்கள். எல்லாவற்றையும் விட நமக்கு உணவு கொடுக்கும் விவசாயியின் பெருமை பற்றி பெண்கள் தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கூட அளிக்காத மாதிரி.. இழுக்கு சேர்ப்பது மாதிரிதான் பெண்ணை நெல் படியை எத்திவிட்டு வீட்டுக்குள் அழைக்கும் பழக்க வழக்கம் இருக்கிறது.
காற்றின் மொழி சீரியல்
காற்றின் மொழி சீரியலில் ஐஸ்வர்யா, ராஜாவுக்கு கல்யாணம் ஆகி வீட்டுக்கு அழைக்கிறார்கள். வீட்டில் பெரியவராக இருக்கும் பாட்டி, இந்த படியை காலால் எத்திவிட்டு உள்ளே வாம்மா என்று சொல்ல அந்த பெண்ணும் நெல் நிறைந்த படியை காலால் எத்திவிட்டு உள்ளே நுழைகிறாள். நெல் மணிகள் சிதறுவதைப் பார்க்கையில் நெஞ்சம் வலிக்கிறது.