இடது கையில் வால்.. வலது கையில் கம்பி.. லாவகமாக பாம்பை பிடிக்கும் பெண் வன அதிகாரி.. குவியும் பாராட்டு
பெண் வன அதிகாரி ஒருவர், பாம்பை சாதுர்யமாகப் பிடித்து பையில் அடைக்கும் வீடியோவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
திருவனந்தபுரம்: கேரளாவில் மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்த பாம்பை, பெண் வனத்துறை அதிகாரி ஒருவர் லாவகமாகப் பிடித்து, துணிப்பையில் அடைக்கும் வீடியோவை நெட்டிசன்கள் வியப்புடன் பகிர்ந்து வருகின்றனர்.
Recommended Video
பெண்கள் என்றாலே கரப்பான்பூச்சிக்கும், பல்லிக்கும் பயப்படுவார்கள் என்ற பிம்பத்தை சினிமாக்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. ஆனால் நிஜத்தில் படையே நடுங்கும் பாம்பையேகூட பயமில்லாமல் பிடிக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு கேரளாவில் நடந்த சம்பவம் ஒன்றே சாட்சி.
கேரளாவின் அட்டக்கடா பகுதி அருகே மரங்கள், செடி, கொடிகள் நிறைந்த குடியிருப்புப் பகுதியில் சமீபத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. உடனடியாக இது பற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் வனத்துறை அதிகாரி ரோஷிணி ஜி.எஸ்.

துணிச்சலான அதிகாரி
சுற்றி இருப்பவர்கள் எல்லாம் பயத்தில் உறைந்திருக்க, பாம்பை லாவகமாக ரோஷிணி பிடிக்கும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுதாராமன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பாம்பின் வாலை இடது கையால் பிடித்து சுவற்றின் ஓரத்திற்கு அழைத்து வருகிறார் ரோஷிணி. தப்பி ஓட முயற்சிக்கும் பாம்பை, லாவகமாக தனது வலது கையில் வைத்திருக்கும் கம்பியின் உதவியால், ஒரு துணிப்பைக்குள் அடைக்கிறார்.

பெண்களின் பங்களிப்பு
பின்னர் சாதுர்யமாக அந்த பாம்பை துணிப்பையில் வைத்து ஒரு முடிச்சுப் போட்டு, அப்பையை கையில் தூக்கிக் கொண்டு செல்கிறார் ரோஷிணி. இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சுதாராமன், ‘பாம்புகளைப் பிடிப்பதற்கென ரோஷிணி முறைப்படி பயிற்சி பெற்றவர்' என்றும், ‘வனத்துறையில் பெண்களின் பங்களிப்பு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது' எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பாராட்டு
இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 200 பேர் ஷேர் செய்துள்ளனர். 'நிச்சயமாக இது போன்ற வேலையை சாதாரண நபர்கள் இப்படி துணிச்சலாகச் செய்ய முடியாது. ரோஷிணி ஒரு சூப்பர் லேடி' என நெட்டிசன்கள் ரோஷிணியைப் பாராட்டி கமெண்ட் பதிவு செய்துள்ளனர்.

சிறப்பு பயிற்சி
இந்த வீடியோவில் உள்ள வனத்துறை அதிகாரி ரோஷிணி, பருத்திப்பள்ளி வனக்கோட்டத்தில் ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீம் உறுப்பினராகவும், பீட் ஃபாரஸ்ட் ஆஃபிசராகவும் பணியாற்றி வருகிறார். 2017ம் ஆண்டு இந்தப் பணியில் சேர்ந்த அவருக்கு 2019ம் ஆண்டு விலங்குகளை மீட்கும் பயிற்சி வழங்கப்பட்டதாக கேரள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications