மலட்டுத்தன்மை.. முஸ்லீம் கடையில் டீ சாப்பிட்டாதீங்க! கேரள காங் மூத்த தலைவர் பிசி ஜார்ஜ் பகீர்.. கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் முஸ்லிம்களின் ஓட்டல்களில் டீ, உணவு சாப்பிட வேண்டாம். முஸ்லிம்களை புறக்கணியுங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிசி ஜார்ஜ் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.
கேரளா காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருப்பவர் பிசி ஜார்ஜ். இவர் கோட்டயம் மாவட்டம் எரட்டுபேட்டா பகுதியில் வசித்து வருகிறார்.

சர்ச்சை பேச்சு
இவர் திருவனந்தபுரத்தில் நடந்த அனந்தபுரி ஹிந்து மகா சம்மேளனம் எனும் மாநாட்டில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் சர்ச்சைசக்குரிய வகையில் சில கருத்துகளை கூறினார். மதம்சார்ந்த வெறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையிலும், தவறான முறையிலும் ஆதாரமற்ற சில விஷயங்களை கூறினார்.

பேசியது என்ன
அதாவது, ‛‛ மாநிலத்தில் முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்களில் விற்கப்படும் டீ உள்ளிட்ட பானங்களில் எச்சில் துப்பப்படுகிறது. மேலும் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மருந்து கலக்கப்படுகிறது. இதன்மூலம் இந்துக்களின் எண்ணிக்கையை குறைத்து நாட்டை கைப்பற்றலாம் என நம்புகின்றனர். இதனால் அவர்களின் உணவகங்கள், டீக்கடைகளை தவிர்க்க வேண்டும்.'' என கூறினார்.

கைது நடவடிக்கை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீஸ் டிஜிபி அணில் காந்த் உத்தரவிட்டார். அதனடிப்படையில் கோட்டை போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இன்று காலை எரட்டுபட்டாவுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். கைதான பிசி ஜார்ஜ் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (இருபிரிவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல்) பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரிடம் திருவனந்தபுரத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தை தொடர்ந்து கேரளாவில்...
ஏற்கனவே கர்நாடகத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எச்சில் உமிழப்படுவதால் பழ, காய்கறிகளை முஸ்லிம் வியாபாரிகளிடம் வாங்க கூடாது. ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் பயன்பாட்டிலும் முஸ்லிம்களை புறக்கணிக்க வேண்டும் என இந்துத்துவ அமைப்பினர் கூறி வரும் நிலையில் தான் கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இப்படி பேசி சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications