கேமராவை ஆப் பண்ணுங்க.. இன்டர்வியூவில் பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்த கேரள நடிகர்.. அதிரடி கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்டர்வியூவின்போது கேமராவை ஆப் செய்யக்கூறி பெண் பத்திரிகையாளரை திட்டி தகாத முறையில் நடந்து கொண்ட நடிகர் ஸ்ரீநாத் பாசியை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஸ்ரீநாத் பாசி. ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர் வீடியோ ஜாக்கியாக மாறினார். அதன்பிறகு 2011ல் சினிமா துறையில் கால்பதித்தார்.
2011ல் மோகன்லால் மற்றும் அனுபம் கெர் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கி ஹிட் அடித்த 'பிராணாயம்' படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஷ்ணுவின் வாழ்க்கையில் அடுத்தடுத்த சோகங்கள்.. போகும் இடமெல்லாம் இப்படியா ஆக வேண்டும்..!!
புதிய படம்
இவர் தற்போது ‛சட்டம்பி' எனும் படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனால் படத்துக்கான புரோமோஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. நடிகர் ஸ்ரீநாத் பாசி உள்பட நடிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். மேலும் தொலைக்காட்சி, யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.
நேர்க்காணல்
அந்த வகையில் சட்டம்பி' படம் தொடர்பாக ஆன்லைன் செய்தி சேனல் நிறுவனம் நேர்க்காணல் எடுக்க விரும்பியது. இதற்கு நடிகர் ஸ்ரீநாத் பாசி ஒப்புக்கொண்டார். நேர்க்காணலும் தொடங்கி நடைபெற்றது. அவரிடம் பெண் பத்திரிகையாளர் கேள்விகள் கேட்டு வந்தார். திடீரென்று ஸ்ரீநாத் பாசி கோபமடைந்தார்.
கேமராவை ஆப் செய்யக்கூறி
மேலும் கேமராவை ஆப் செய்யும்படி கூறிய அவர் பெண் பத்திரிகையாளரை கோபமாக திட்டினார். மேலும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அதோடு கேமராமேனையும் அவர் திட்டியுள்ளார். கேமரா ஆப் செய்த பிறகு பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையில் அவர் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
நோட்டீசுக்கு பதில் இல்லை
இதுதொடர்பாக அந்த பெண் நிருபர் கொச்சி மரடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் ஸ்ரீநாத் பாசி நோட்டீசுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என போலீசிடம் அனுமதி கோரினார். ஆனால் திடீரென்று நேற்று போலீஸ் நிலையம் சென்று விசாரணைக்கு ஆஜரானார்.
அதிரடி கைது
இதையடுத்து ஸ்ரீநாத் பாசியிடம் ஒருமணிநேரம் வரை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நான் யாரிடமும் தவறாக நடக்கவில்லை. என்னிடம் தவறான கேள்வி கேட்டதால் அதற்கு பதில் அளிக்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தேன். மோசமான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என போலீசாரிடம் கூறினார். இருப்பினும் அவரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீநாத் பாசி மீது இந்திய தண்டனை சட்டம் 509, 354(ஏ), 294 பி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.