சசிகலா ஆடியோ ரிலீஸ்: அதிமுக குட்டையைக் குழப்பவா? மீன் பிடிக்கவா? பா. கிருஷ்ணன்
"இன்னைக்குயாரோட பேசறாங்க? என்ன பேசறாங்க? ஏதாவது வெடிக்குமா?"
இது கடந்த சில நாட்களாக அனைத்திந்திய அண்ணா திமுக-வின் அனைத்துத் தரப்பினரின் "மைன்ட் வாய்ஸ்" ஆகிவிட்டது.
கடந்த சில நாட்களாக தினந்தோறும் சசிகலா சில தொண்டர்களுடன் பேசுவதாக ஆடியோ உரையாடல் வெளியிடப்பட்டு வருகிறது. இதன் அதிர்வலை அண்ணா திமுக-வில் பரவிவிட்டது.
கொரோனாவின் இரண்டாவது அலை குறைகிறது என்று பரவலாகச் செய்தி வந்து கொண்டிருக்கும் நிலையில், சசிகலாவின் அதிர்வலை பரபரப்பை ஏற்படுத்துகிறதா என்று எல்லாக் கட்சியினரும் ஊடகத்தினரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அண்ணா திமுகவின் இரட்டைத் தலைமையில் இப்போது முரண்பாடுகள் மெல்ல மெல்ல உருவாகி வருகிறது என்று பல தரப்பினர் பேசி வருகிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலா சிறை சென்றதை அடுத்து கட்சியின் தலைமை யார் பிடிக்குள் வரும் என்ற கேள்வி எழுந்தபோது, எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் பாஜக சமாதானம் செய்தது. அதையடுத்து, கட்சியின் பொதுக் குழு கூடி பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு, இரட்டைத் தலைமையை உருவாக்கியது. அது இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் அத்துடன் அது ஒரு நிரந்தர ஏற்பாடாக உறுதி செய்யப்படவில்லை என்பதே உண்மை.
இடையிடையே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சுவரொட்டி தோன்றுவதும் சமாதானம் செய்வதும் அவ்வப்போது நடந்து வந்துள்ளது. இடையில் ராஜன் செல்லப்பா போன்றவர்கள் கட்சியின் இரட்டைத் தலைமை குறித்து கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால், அது நீடிக்கவில்லை.
இப்படியே நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டது. தேர்தல் நெருங்கியபோது, கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தலைதூக்கியது. முடிவு செய்யும் சமயத்தில் நீண்ட நேர நள்ளிரவு நாடத்தின் இறுதியில், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வேமே அறிவிக்கும்படி ஆகிவிட்டது.
தேர்தல் முடிவு சாதகமாக அமையாததால், அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குக் குறிவைத்தார் ஓ.பி.எஸ். எல்லோரும் அதற்கு "ஓஎஸ்" என்று சொல்வார்கள் என அவர் எதிர்பார்த்தார். நடக்கவில்லை. இறுதியில் எடப்பாடி பழனிசாமி பெயரை அறிவிக்கும் கட்சியின் அதிகாரபூர்வ அறிக்கையில் அவர் கையெழுத்திட நேர்ந்துவிட்டது. இதுவே அவரது அதிருப்தியின் உச்சத்தைக் காட்டியது.
இது என்ன கொங்கு கட்சியா?.. உறுத்திய 4 விஷயம்.. கம்பேக்கிற்கு கட்டம் கட்டிய சசிகலா.. நடந்தது என்ன?
கட்சித் தொண்டர்கள் மத்தியில் இரட்டைத் தலைமை அலுப்பை ஏற்படுத்திவிட்டதைப் புரிந்து கொண்ட சசிகலா ஆடியோ மூலம் அண்ணா திமுக தலைவர்களை ஆடச் செய்து வருகிறார். தேர்தலுக்கு முன் மிகவும் எச்சரிக்கையாக "ஒதுங்கிக் கொள்கிறேன்" என்று சொன்ன அவர் தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் தன்னைச் சிறிதளவும் காட்டிக் கொள்ளவில்லை.
பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்தபோது தன்னை அண்ணா திமுகவைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொள்வதிலேயே அவர் கவனமாக இருந்தார். எல்லாவற்றையும் விட அக்கட்சியில் பொதுச் செயலாளர் பதவி இல்லை.
இங்கே பழைய கதையை நினைத்துப் பார்க்க வேண்டும். திராவிடக் கழகத்திலிருந்து வெளியேறி திமுகவைத் தொடங்கிய அண்ணா கட்சியில் தலைவர் பதவி இல்லை. பொதுச் செயலாளராகத் தானே ஏற்றுக் கொண்டார். "என்றைக்கும் பெரியார்தான் திமுக கழகத்தின் தலைவர். அதனால், அந்த இடம் காலியாக இருக்கிறது" என்று அறிவித்தார். காரணம், அந்த நிலைமைக்கு முன்பு, தி.க.வில் தலைவராக அண்ணா ஏற்றுக் கொண்டவர் பெரியார்தான். எனவே, அதே நிலை நீடிக்கிறது என்பதை மறைமுகமாக அவர் உணர்த்தினார்.
இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால், தற்போது அண்ணா திமுகவில் பொதுச் செயலாளர் பதவி இல்லை. ஒருங்கிணைப்பாளர் பதவியைத்தான் ஓ.பி.எஸ். ஏற்றிருக்கிறார். கட்சியின் பொதுச் செயலாளராக கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலாதான்! (அது செல்லாது, வழக்கு என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.)
கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறை சென்றதால், நிலைமை மாறிவிட்டது. கட்சியில் அப்பதவி நீக்கப்பட்டது.
எப்படி பெரியாரின் தி.க.விலிருந்து விலகிய அண்ணா தனக்குத் தலைவராக பெரியார்தான் என்று அறிவித்தாரோ, அதைப் போல் சசிகலாவை அண்ணா திமுகவின் பொதுச் செயலாளரை ஏற்றவர்களே (அதிமுகவினர்) மீண்டும் அந்தப் பதவியை அதாவது காலியாக இருப்பதாகக் கருதப்படும் பதவியை ஏற்பார் என்ற மனநிலைக்கு அதிமுக தொண்டர்கள் வந்துவிட்டார்கள் என்ற நிலைமையை நிறுவச் செய்வதுதான் அவரது நோக்கம்.
அதற்குத்தான் இந்த ஆடியோ லீக்! தொண்டர்கள் என்ற குளத்தில் ஒவ்வொரு கல்லாக வீசி கலக்குவதற்கு முயல்கிறார் சசிகலா. அதை விழுங்க முடியாமல் திணறுகிறார் எடப்பாடி. தனக்குக் கிடைக்காத பதவியைப் பறித்ததாகக் கருதும் ஓ.பன்னீர்செல்வம் தனி டிராக்கில் அறிக்கைகளை விடுகிறார். அதாவது சசிகலா கட்சிக்குள் மீண்டும் வந்தால் அவருடன் ஓட்டிக் கொள்வதே தனக்கு சாதகம் என்று கருதி மவுனம் சாதித்திருக்கக் கூடும்.
அடுத்து இந்த நாடகம் எந்த திசையில் செல்லும் என்பதை அடுத்தடுத்து வரும் காட்சிகளைக் கொண்டு எல்லோரும் முடிவுக்கு வந்துவிடலாம்.
அதே சமயம் ஒரு சில கேள்விகள் இன்னும் விடை தெரியாமல் காத்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த காலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன் என்று கலைஞர் கருணாநிதி அறிவித்தபோது கட்சித் தொண்டர்கள் கோபாலபுரம் வீட்டை முற்றுகையிட்டு தலைவரின் முடிவை ஆட்சேபித்து குரல் எழுப்பினர்.
ஜெயலலிதா இரு முறை அரசியல் துறவறம் போவதாக அறிவித்தபோதும் இதைப் போன்ற நிலைமைதான் ஏற்பட்டது. அவை இரண்டும்தான் ஒருவரது ஆளுமையை முழுமையாக அடையாளம் காணும் கருவியாகும்.
தேர்தலுக்கு முன் ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தபோது ஏன் அதைப் போன்ற ஆர்ப்பாட்டம் ஏற்படவில்லை. சிறையிலிருந்து காரில் திரும்பியபோது, அப்படி வரவேற்றவர்களில் ஒருவர் கூட ஏன் குரல் எழுப்பவில்லை?
"வந்துடுவேன்பா. எல்லாத்தையும் சரிசெய்யலாம்" என்று ஒவ்வொரு தொண்டருக்கும் ஆறுதல் கூறும் குரல், ஜெயலலிதா உடல் நலம் குன்றி, படுக்கையில் இருந்தபோது, இதைப் போல் ஆடியோ ரிலீஸ் ஏன் செய்யவில்லை? குறைந்தபட்சம் அறிக்கை கூட ஏன் விடவில்லை? அப்போது ஏன் மவுனம் காத்தார்?
இப்போது கூட கட்சியின் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விவரமான உறுதியான அறிக்கையை வெளியிடுவதற்குப் பதில் தொண்டர்களுடன் பேசுவது போல் ஆடியோவை ரிலீஸ் செய்யவேண்டும்?
சசிகலா அண்ணா திமுக குட்டையில் மீன் பிடிக்கப் போகிறாரா? குட்டையைக் குழப்பப் போகிறாரா?