சுப்பிரமணியம் கல்லூரியில் இணைய பயிலரங்கம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் பயன்பெறும் பொருட்டுத் தமிழ் இணையப் பயிலரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.வெள்ளியங்கிரி வரவேற்புரையாற்ற, கல்லூரித் தாளாளர் சு.பழனியாண்டி தலைமை தாங்கினார். வேலூர் அரிமா சங்கத்தின் பட்டயத் தலைவர் வழக்கறிஞர் ஏ.பி.காமராசன் தொடக்கவுரையாற்றினார்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் பயிலரங்கின் முதல் அமர்வில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தார்.
கணிப்பொறியைப் பயன்படுத்தித் தமிழில் தட்டச்சுச் செய்தல், தட்டச்சுப்பலகை வகைகள், மின்னஞ்சல், உரையாடல், இணைய இதழ்கள், இணையத்தில் உள்ள நூலக வசதி, கலைக்களஞ்சியம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம், தமிழ்மணம் திரட்டி, வேலை வாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கத்துடன் பயிற்சியளித்தார்.
புதுச்சேரிப் பொறியாளர் வே.முருகையன் இணையத்தள வடிவமைப்பு பற்றி மாணவர்களுக்குப் பயிற்சியளித்தார்.
சென்னைக் கணியத் தமிழ் நிறுவனத்தைச் சேர்ந்த வெ.யுவராசன் அவர்கள் வலைப்பூவில் ஒலி, ஓளிக்காட்சிகளை இணைப்பது பற்றி விளக்கினார்.
தருமபுரி செல்வ முரளி அவர்கள் தமிழில் உள்ள தேடுபொறி பற்றியும் இணையத்தின் பன்முகப்பயன் பற்றியும் விளக்கினார்.
பிற்பகல் அமர்வில் தமிழா டாட்காம் நிறுவனத்தைச் சேர்ந்த முகுந்தராசு மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம், வலைப்பூ உருவாக்கம் பற்றி விரிவாக விளக்கினார்.
கணிப்பொறி, இணையம் (இண்டர்நெட்) பயன்படுத்த ஆங்கிலம் தேவையிலை. தமிழ் மட்டும் தெரிந்தவர்களும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்ற தன்னம்பிக்கையை ஊட்ட, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.