மார்ச் 18ல் மதுரையில் புவி வெப்பமயமாக்கலுக்கு எதிரான மாநாடு தொடக்கம்
நெல்லை: புவி வெப்பமயமாக்கலுக்கு எதிரான மாநில மாநாடு மதுரையில் வரும் 18-ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமலைமுருகன் கூறியதாவது,
புவி வெப்பமயமாக்கலுக்கு எதிரான மாநில அளவிலான மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்கிறது.
இதி்ல் முதல் நாள் மாலையில் ஐந்திணை ஊர்திகள், மனித நேய ஊர்திகள், கலை நிகழ்ச்சிகளுடன் நடக்கும் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். பேரணியை மதுரை மாவட்ட கலெக்டர் துவஙகி வைக்கிறார்.
2-ம் நாள் நடக்கும் மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட கருத்தரங்கு அமர்வுகள் நடக்கிறது. 3-ம் நாள் காலையில் பங்கேற்பாளர்களின் 20க்கும் மேற்பட்ட அமர்வுகள், மாலையில் மதுரையில் பிரகடனம் என்ற பெயரில் பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்படுகிறது.
இயற்கையோடு இணைந்த மனித வாழ்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இம்மாநாடு நடக்கிறது. பூமி வெப்பமயமாக்கலையும், அதன் பாதிப்புகளையும், அதற்கான நேரடி, மறைமுக காரணங்களையும் அறிய உதவும் வகையிலும், இன்றைய பொருளாதார போக்கிற்கு மாறாக இயற்கை நேய மனித நேய வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வழிவகுத்தல் போன்ற குறிக்கோள்களை வலியுறுத்தி இம்மாநாடு நடத்தப்படுகிறது என்றார்.