மயிலாப்பூரில் பங்குனிப்பெருவிழா கோலாகலம் - 63 நாயன்மார்களுடன் காட்சியளித்த கபாலீஸ்வரர்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய அம்சமான அறுபத்து மூவர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் முக்கிய திருவிழாவான அறுபத்து மூவர் திருவிழா இன்று நடைபெற்றது. வெள்ளி விமானத்தில் இறைவன் கபாலீஸ்வரர் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் மாட வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப்பெருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் இறைவன் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
அதிகார நந்தி, ரிஷப வாகனங்களில் இறைவன் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்றைய தினம் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
25 பவுன், 5 லட்சம் வரதட்சிணை கேட்டு வன அலுவலருக்கு டார்ச்சர்.. 5 மாத கருவை கொன்ற மாமியார், கணவர்!
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டு காலம் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எட்டாம் நாள் விழா அறுபத்து மூவர் விழா உலகப்புகழ் பெற்றது. பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி விழாவும் மிகவும் புகழ்பெற்றது.
சிவபக்தரின் மகள் பூம்பாவை
சிவநேசர் என்னும் சிவபக்தர், தனது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். ஆனால். விதிவசமாக பூம்பாவை பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். அவளுடைய அஸ்தியை ஒரு குடத்தில் வைத்து, திருஞானசம்பந்தரின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட சிவநேசர், அஸ்தி குடத்தை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கி, நடந்த சம்பவத்தைக் கூறினார்.
பூம்பாவை உயிர்த்தெழுதல்
விஷ நாகம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததன் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறி, சிவநேசரின் கோரிக்கையை சம்பந்தர் நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டுசெய்து, பின் முக்தி அடைந்தாள். இக்கோவில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார்.
உயிர்பித்த நிகழ்ச்சி
சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, இன்று காலையில் நடைபெற்றது. சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவமூர்த்திகள், கபாலி தீர்த்தத்துக்கு எழுந்தருளினர். ஒரு கும்பத்தில் அஸ்திக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்பட்டது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாகச் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அறுபத்து மூவர் திருவிழா
இந்த ஆண்டு அறுபத்து மூவர் விழா இன்று நடக்கிறது. வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோலவிழி அம்மன், விநாயகர் இவர்களைத் தொடர்ந்து அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெற்றது. கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டீகேஸ்வரர், மூலவர்கள் வலம் வந்தனர். இதை மாட வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
அன்னதானம்
மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கபாலீஸ்வரரை தரிசனம் செய்தனர். சென்னை மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்துள்ளனர். காணும் இடங்களில் எல்லாம் அன்னதானம் நடைபெற்றது. வெயில்காலம் என்பதால் நீர்மோர், ஜூஸ், குளிர்பானங்கள் தானமாக வழங்கப்பட்டன.
பங்குனி உத்திர திருக்கல்யாணம்
ஒன்பதாம் நாள் சிவபெருமான் பிட்சாடனார் வடிவிலும் மகாவிஷ்ணு மோகினி வடிவிலும் காட்சியளிப்பர். பத்தாம் நாள் காலை கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார். பவுர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பார் அன்னை பார்வதி. அம்பாள் திருக்கல்யாணத்தைப் பார்க்கிறவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.