இலங்கை-கனடாவில் 6 தமிழர்கள் தொடர் உண்ணாவிரம்
-ரூபன் சரவணன்இலங்கை விவகாரம் தொடர்பாக கனடா தலைநகர் ஒட்டோவா நகரில் வெலிங்டன் வீதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கவனயீர்ப்பு நிகழ்வில் சனிக்கிழமை ஆயிரக்கணக்காணோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தம் செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும், போர்த் தளத்தில் வசிக்கும் மக்களுக்கான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்,
இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான ரசாயன ஆயுதப் பயன்பாட்டை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை முதல் 6 தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் துவக்கி தொடர்ந்து வருகின்றனர்.
ஜுலியஸ் ஜேம்ஸ், புஸ்பராஜா நல்லரத்தினம், நடராஜா தையல்நாயகி, வைசீகமகாபதி யோகேந்திரன், மகாலிங்கம் சிவனேஸ்வரி மற்றும் கணபதிப்பிள்ளை துளசிகாமணி ஆகியோரே அந்த ஆறு பேராவர்.
இவர்களில் உடல்நலக் குறைவுடன் உண்ணாநிலையைத் தொடரும் தையல்நாயகி அவர்களின் நிலை கவலைக்கிடமானதாக உள்ளதாகவும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மயக்க நிலையை அடைந்து விடுவார் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
"கனடா பிரதமரின் விழிகள் திறக்க மறுப்பின் எங்களுடைய விழிகள் மூடப்படும்" என உண்ணாநிலையை மேற்கொள்ளும் தமிழர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை உடனடி போர் நிறுத்த ஒப்பந்தத்தத்தை மேற்கொள்ளுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் லாரன்ஸ் கனொன் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கை இலங்கை அரசினால் மறுக்கப்படும் நிலையில் கொழும்பில் வசிக்கும் இலங்கைக்கான கனடா உயர் அதிகாரி அஞ்சலா பொக்டனை வெளியேற்ற வேண்டுமென உண்ணாநிலையை மேற்கொள்ளும் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.