மழை வேண்டி கழுதைக்குத் திருமணம்
கேள்வி - பதில்
கே: கம்யூனிஸ்ட்கள், ஜெயலலிதாவை போட்டிபோட்டுக் கொண்டு ஆதரிக்கக் காரணம் என்ன?
ப: மார்க்சிஸ்ட்களுக்கு ஒரு பெரிய நிர்பந்தம் இருக்கிறது. மேற்கு வங்காளம், கேரளம், திரிபுரா தவிர இன்னும் ஒருமாநிலத்தில் கம்யூனிஸ்ட் பலம் பெறுவது - இழந்த தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற உதவும்.
இதற்கு தமிழகத்தில் எப்படியாவது சில சீட்களைப் பிடிக்க வேண்டும். அதற்கு ஒரு கழக தயவு தேவை. பா.ஜ.க.இருப்பதால், தி.மு.க. தயவை நாட முடியாது. ஆகையால் அ.இ.அ.தி.மு.க. உறவு தவிர்க்க முடியாதது.
இப்படிப்பட்ட ஒரு நிர்பந்தத்தில் மார்க்சிஸ்ட்கள் இருக்கிறார்கள் ; கம்யூனிச ஒற்றுமை க்காகவும், மதச்சார்பின்மை என்ற முத்திரைக்காகவும், வலது கம்யூனிஸ்ட்களும், மார்க்சிஸ்ட்கள் இருக்கிற கூட்டணியைவிரும்புகிறார்கள். இதுதான் இன்றைய மார்க்சிசம்.
கே: மதச் சார்பின்மைக்கு சர்டிஃபிகேட் பெறுவது எப்படி?
ப: ரொம்ப சுலபம். இந்து மதத்தை தாழ்வாகப் பேசினால் போதும்.
கே: காட்டுக்குள் சென்று வர என்ன தகுதி வேண்டும்?
ப: புலி ஆதரவாளராக இருக்க வேண்டும் ; குறைந்த பட்சம் புலிகளின் பிரச்சாரத்திற்கு உதவுகிற வகையில்அவர்களைப் பற்றி எழுதியிருக்க வேண்டும்.
கே: அதிகம் படித்தவர்கள் நிறைந்த மாநிலமான கேரளாவில், விஷ சாராயத்தால் 32 பேர் பலியானதும்,22 போலீசார் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதும் குறித்து தங்கள் கருத்து?
ப: இதற்கும், படிப்பிற்கும் என்ன தொடர்பு? படித்தவர்களை அதிகமாகக் கொண்ட நாடுகளில்தான் போதை மருந்துபழக்கம் பரவிக் கிடக்கிறது.
கே: நாட்டில் சகிப்புத் தன்மை அறவே போய்விட்டது. ஜாதி, மதத்தின் பெயரால் மக்களைவன்முறைக்குத் தூண்டி விடும் அரசியல் தலைவர்களை இனம் கண்டு ஒதுக்கித் தள்ள வேண்டும்.இவர்களை இப்படியே விட்டால் நாட்டுக்கு ஆபத்து - என்று குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன்கூறியிருப்பது குறித்து ... ?
ப: முழுமையான நியாயம்.
கே: ஜெயலலிதாவிடம் உள்ள தீர்க்கதரிசனம், விசாலமான இதயம் - இவை டெல்லியில் உள்ளதலைவர்களிடம் கூட எவரிடமும் இல்லை- என்கிறாரே - பி.ஹெச். பாணடின்? இதில் உங்கள்அபிப்பிராயம்?
ப: பா.ஜ.க, அரசைக் கவிழ்த்தால் அடுத்த ஆட்சி அமைப்பது எளிது என்று ஜெயலலிதா நம்பியதில் -தீர்க்கதரிசனத்தையும் ; கருணாநிதிக்கு வாழ்நாள் முழுதும் சிறை என்ற அவருடைய நினைப்பில் - விசாலமானஇயக்கத்தையும் காண்பது பி.ஹெச். பாண்டியனின் உரிமை. நாம் யார் அது பற்றிக் கேட்க?
கே: காங்கிரஸ் கட்சியை மட்டும் 6 மாதங்களுக்கு எங்களிடம் குத்தகைக்கு தந்திருந்தால், பிரதமர்பதவியை கைப்பற்றி இருப்போம் என்கிறாரே பி,ஹெச். பாண்டியன்?
ப:கண்ணில் பட்டதை விலைக்கு வாங்கிய காலம் போய், குத்தகைக்கு வாங்க நினைக்கிற காலம் வந்திருக்கிறது.ஐயோ பாவம்.
கே: இப்போது குழப்ப நிலையில் இருப்பது மூப்பனாரா? ராமதாசா?
ப: ராமதாஸ்தான். அவருடைய குழப்பம் தீர்ந்த பிறகு, தன்னுடைய நிலையை தீர்மானம் செய்து கொள்வதுதான்நடைமுறை சாத்தியம் என்பதில் மூப்பனார் தெளிவாக இருக்கிறார்.
கே: அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவின் சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறப்பதாக, வாழப்பாடி ராமமூர்த்திவிமர்சித்துள்ளது பற்றி ...?
ப: அவர் கூறியுள்ளது விமர்சனம் அல்ல.செய்தி.
கே: இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப பட்டிமன்றத் தலைப்பு ஒன்று கூற முடியுமா?
ப: வீரப்பன் விஷயத்தில் தமிழக அரசு அடைந்திருக்கும் நிலை - அதோ கதியா அல்லது அதே கதியா?
கே: இன்றையஅரசியல் நெருக்கடியில், ஜெயலலிதாவுக்குப் பின்னரும் ஒரு பிராமணர் அ.தி.மு.க.வுக்குதலைமை ஏற்க நேர்ந்தால், வீரமணியின் ஆதரவு தொடருமா?
ப: நடக்காது. வீரமணியின் ஆதரவு ஜெயலலிதாவிற்குத்தானே தவிர, ஜெயலலிதீயத்திற்கு அல்ல.
கே: ஷார்ஜாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், இந்தியா அடைந்த படுதோல்வி, நம் அணியின்ஒற்றுமை யின்மையைத்தானே காட்டுகிறது?
ப: இதை விட என்ன ஒற்றுமை வேண்டும்? ராபின் சிங்கைத்தவிர மற்ற எல்லோரும்10 ரன்களுக்கும் கீழேஎடுத்திருக்கிறார்கள். இந்த ஒற்றுமை - ஒருவரை ஒருவர் மிஞ்சி விடக்கூடாது என்ற அக்கறை - உங்கள் கண்களில்படவில்லையா?
கே: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவுக்குப் போக அரசியல் தலைவர்கள் போட்டிபோடுவது ஏன்?
ப: செத்துவிட்டாரே! இனிமேல் அவரால் போட்டி கிடையாதே!
கே: நீங்கள் கூட துக்ளக் ஆட்சிதான் அடுத்த ஆட்சி என்று குரல் கொடுத்துப் பார்க்கவேண்டியதுதானே?
ப: குரல் கொடுப்பது என்ன? எந்த ஆட்சி வந்தாலும், அது துக்ளக் ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது.அப்படியிருக்க நமக்கு என்ன கவலை? வெற்றி நமதே!
கே: சோனியாவை எதிர்த்து, ஜிதேந்திர பிரசாதா போட்டியிடுவது நல்ல அறிகுறிதானே?
ப: என்னவோ பெரிய விஷயம் நடந்து விட்ட மாதிரி, இது பற்றி விமர்சனம் செய்யப்படுவது எனக்கு வியப்பைத்தருகிறது. ஒன்றும் நடந்து விடவில்லை. ஒரு தமாஷ் நடக்கிறது. அவ்வளவுதான்.
கே: ஜெயலலிதா ஆட்சியை விட, கருணாநிதி ஆட்சி நன்றாக இருக்கிறது என்று எழுதுகிறீர்கள். மீண்டும்கருணாநிதி ஆட்சிக்கு வருவாரா என்று கேட்டால் தயங்குகிறீர்களே? ஏன்?
ப: என் கருத்து ஒரு புறம் இருக்கட்டும். மக்கள் கருத்து எப்படி அமையும் என்பது அவ்வளவு நிச்சயமாகச் சொல்லக்கூடிய விஷயம் அல்லவே.போகப்போக, நமக்கு நிலைமை புரியலாம். பார்ப்போம்.
கே: தனி நபர் துதிபாடல் அ.தி.மு.க.வில் அதிகமா? தி.மு.க.வில் அதிகமா?
ப: தி.மு.க.வில் இந்த துதி - ஆசீர்வாத மந்திரம் மாதிரி ; விசேஷ நாட்களில் ஓதப்படும், அ.இ.அ.தி.மு.க. வில் இதுவினாயகர் ஸ்தோத்திரம் மாதிரி - இதைச் செய்யாமல் எதையும் ஆரம்பிக்க முடியாது.