ஏப்ரல்-மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல்!
டெல்லி: வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி கூறியுள்ளார்.
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் மே மாத மத்தியில் முடிவடைகிறது. இந் நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய கோபாலசாமி,
மார்ச் மாதம் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும். எனவே, அதற்கு பிறகு தேர்தல் நடத்துவதுதான் நல்லது. ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடத்துவதற்கு பெருமளவு வாய்ப்புண்டு.
இதைப்பற்றி இப்போதே மேலும் விரிவாக பேச இயலாது. அடுத்த மாத மத்தியில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு இறுதி முடிவெடுக்கப்படும்.
காஷ்மீரைப் பொறுத்தவரை அமர்நாத் கோவில் நில பிரச்சனை காரணமாக, காஷ்மீரில் உடனடியாக தேர்தல் நடத்த ஆரம்பத்தில் நான் விரும்பவில்லை. அரசியல் கட்சிகளும் கூட தேர்தலை விரும்பாமல் இருந்தனர்.
டிசம்பர் மாதத்தில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால், அவர்களால் பிரசாரம் செய்யவே முடியாது என்று கருதினோம்.
ஆனால் அதையெல்லாம் மீறி, காஷ்மீரில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முந்தைய தேர்தலை விட, 15 முதல் 20 சதவீதம் கூடுதலாக ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
இதற்கு தீவிரவாதிகள் மீதான பயம் குறைந்துள்ளதும், வானிலை நன்றாக இருந்ததும்தான் காரணம். கடந்த ஓராண்டாகவே தீவிரவாத சம்பவங்கள் பெருமளவு குறைந்து விட்டன. எனவே, மக்களுக்கு பயமில்லை.
தீவிரவாதம் இல்லாததுதான், கூடுதல் ஓட்டுப்பதிவுக்கு முக்கிய காரணம். மேலும், யாரையும் கட்டாயப்படுத்தி ஓட்டுப்போட வைக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அதன்படி தேர்தல் நடந்திருப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது.
இந்த தேர்தலில் நான் நடுவர்தான். வாக்காளர்களுக்குத்தான் ஆட்ட நாயகர் விருது தர வேண்டும் என்றார் கோபாலசாமி.