வைகோவை எதிர்கொள்ளும் காங்கிரஸின் மாணிக்க தாகூர்
முன்னர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுந்தரவடிவேலுவுக்கு கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியதால் மாணிக்க தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது சொந்த ஊர் சிவகங்கை. இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், துணைத்தலைவர் பதவிகளை வகித்துள்ளார். தற்போது இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஆணையராக இருந்து வருகிறார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வக்கீலாக பணி புரிந்து வரும் இவருக்கு வயது 34. மனைவி பெயர் சுபாஷினி. மதுரையைச் சேர்ந்தவர். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
தந்தை பெயர் பகிரத நாச்சியப்பன். தாத்தா சொக்கலிங்க அம்பலம். இவர் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர். கவியரசு கண்ணதாசனை சட்டசபைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சாதனைக்குரியவர்.
மாணிக்க தாக்கூர், காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பனின் உறவினர் ஆவார்.
முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த மாணிக்க தாக்கூர், விருதுநகர் தொகுதியில் உள்ள கணிசமான முக்குலத்தோரின் வாக்குகளை பெறும் நோக்கில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
இங்கு வைகோ, கார்த்திக் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடும் மாணிக்க தாகூர், வெற்றிக் கனியை பறிப்பாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.