மேடாஸ்: கைவிட்ட ஆந்திரா... கைகொடுத்த கர்நாடகம்!
ஹைதராபாத்: ஹைதராபாத் பெருநகர் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து ராமலிங்க ராஜூவின் மேடாஸ் நிறுவனத்தை முழுமையாகக் கழட்டிவிட்டது ஆந்திரப்பிரதேசம்.
ஆனால் திடீர் திருப்பமாக, கர்நாடகாவில் அமையவிருக்கும் இரு பெரிய சர்வதேச விமான நிலையங்களை அமைக்கும் பொறுப்பை மேடாஸிடம் ஒப்படைத்துள்ளது கர்நாடக அரசு.
பெரும் மோசடியில் சிக்கி சத்யம் சாம்ராஜ்யம் சரிந்தபோதே, அதன் துணை நிறுவனமான மேடாஸ் மீதிருந்த நம்பிக்கையும் தகர்ந்தது.
இதனால் மேடாஸுக்கு வரவிருந்த பெரிய ஒப்பந்தங்கள் பல ரத்தாகின. அதில் முக்கியமானது ரூ.12000 கோடி மதிப்புள்ள ஹைதராபாத் பெருநகர ரயில் திட்டம்.
மேடாஸ் நிறுவனத்தின் நிதி நிலை எதிர்பார்த்த மாதிரி இல்லை என்று காரணம் கூறி இந்த ஒப்பந்ததை ரத்து செய்தது ஆந்திரப் பிரதேசம். இத்தனைக்கும் ரயில் திட்டம் முடிவடைந்த 30 ஆண்டுகளில் ரூ.300000 கோடி வருமானத்தைத் தருவதாக உறுதியளித்திருந்தது மேடாஸ்.
இந்த ஒப்பந்தம் ரத்தானதில் மேடாஸ் பெரிதும் ஏமாற்றமடைந்தது. இன்று காலை கடைசி கட்ட முயற்சியாத ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியைச் சந்தித்தார் மேடாஸ் சேர்மன் ராமலிங்கம். ஆனாலும் நிதி நிலை குறித்த உறுதி எதையும் அவர் தரவில்லை என்று தெரிகிறது.
கைகொடுத்த கர்நாடகம்!
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அமையவிருக்கும் பெரிய க்ரீன்ஃபீல்டு விமான நிலையங்கள் இரண்டை அமைக்கும் ஒப்பந்ததை மேடாஸுக்கு வழங்கியுள்ளது கர்நாடக அரசு.
"மேடாஸ் இயக்குநர் குழுவின் தலைவர் கே ராமலிங்கம் எங்களிடம் நிதி நிலை குறித்த உறுதியை அளித்துள்ளார். எனவே இந்த ஒப்பந்ததை முழு நம்பிக்கையுடன் அந்த நிறுவனத்துக்கு அளிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார் கர்நாடக உள்துறை அமைச்சர் விஎஸ் ஆச்சார்யா.
சத்யம் நிறுவன மோசடி விவகாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, இந்த ஒப்பந்தத்தை மேடாஸுக்கு வழங்க கர்நாடக அரசும் தயங்கியது. ஆனால் மேடாஸ் ராமலிங்கம் அளித்த உறுதிமொழிக்குப் பிறகு இந்த பெரிய ஒப்பந்தத்தை அளித்துள்ளது கர்நாடகம்.
அடுத்த இரு மாதங்களில் இந்த விமான நிலையங்களுக்கான பூர்வாங்கப் பணிகளை ஆரம்பிக்கிறது மேடாஸ்.