நகைக் கடையில் ரூ. 1 லட்சம் மோசடி: போலி கிரெடிட் கார்டு கும்பலுக்கு வலை
நாகர்கோவில்: நாகர்கோவில் நகைக் கடையில் போலி கிரெடிட் கார்டு மூலம் ரூ 1லட்சம் மதிப்புள்ள நகைகளை மோசடி செய்தது ஒரு கும்பல். அந்தக் கும்பலைப் பிடிக்கப் போன போலீஸார், அவர்கள் தப்பி விட்டதால் அவர்களது டிரஸ் உள்ளிட்டவற்றை அறையிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள பிரபல நகைக் கடையில் போலி கிரெடிட் கார்டு மூலம் சுமார் 1 லட்சம் மதிப்பிலான நகைகளை ஒரு கும்பல் மோசடி செய்தது. நகைக் கடைக்காரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.
கடைக்கு வந்த வாலிபர்கள் நாகர்கோவிலில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, அந்த லாட்ஜில் சோதனை நடத்திய போலீசார் கோவையை சேர்ந்த ஷாஜகான் என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கார் டிரைவர் என்பது தெரிய வந்தது.
அவருடன் அறையில் தங்கியிருந்த மற்றவர்கள் தப்பி விட்டனர். இதையடுத்து அங்கிருந்த உடைமைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் விலை உயர்ந்த ஆடைகள், வாசனை திரவியங்கள் மற்றும் செல்போன்கள் அடக்கம்.
அந்த செல்போன்களில் பல ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் வந்திருந்தது தெரிய வந்தது. அந்த செல்போன் மூலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி நகைகள் மூலம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இந்த கும்பலில் பெண்களும் இருந்துள்ளனர். பல பெண்களோடு இந்த கும்பலுக்கு தொடர்பு உள்ளது. பெண்களை அழைத்து கொண்டு சென்றால்தான் நம்புவார்கள் என்பதால் பெண்களுடன் தான் நகை கடைக்கு சென்றுள்ளனர் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.