நிலச் சிக்கலில் மாஜி மந்திரி நேரு!: பழிவாங்கப்படும் திமுகவினர்- ஸ்டாலின்
திருச்சி மாவட்டத்தில் நில அபகரிப்பு மற்றும் நில மோசடி புகார்கள் குறித்து நில மீட்பு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறையூரில் காமராஜ் என்பவரின் நிலத்தை அபகரித்ததாக திருச்சி மாநகராட்சி கோட்டத் தலைவர் அறிவுடைநம்பி கைது செய்யப்பட்டார். மேலும் சில தி.மு.க. பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு மீது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி சிந்தாமணி வி.என். நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் கொடுத்துள்ள புகாரில்,
திருச்சி மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்கு செல்லும் பாதை எங்களுடைய நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கே.என்.நேரு, அவரது தம்பி ராமஜெயம் ஆகியோரிடம் கேட்ட போது இடத்தை பற்றி பேசினால் கஞ்சா வழக்கு போடுவோம் என மிரட்டினர். அதே போன்று பஸ் உரிமையாளர் ராஜகோபால், செல்வேந்திரன் ஆகியோரும் கொலை மிரட்டல் விடுத்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
செல்வேந்திரன் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர், குடமுருட்டி சேகரின் உறவினர் ஆவார். ஏற்கனவே குடமுருட்டி சேகர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், செல்வேந்திரனும் சிக்கலில் மாட்டியுள்ளார்.
இந்த நில ஆக்கிரமிப்பு புகார் குறித்து திருச்சி மாநகர விசாரிக்க கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாசுதேவனுக்கு போலீஸ் கமிஷனர் மாசானமுத்து உத்தரவிட்டுள்ளார்.
நேரு உள்ளிட்டோர் மீதான இந்தப் புகாரால் திருச்சி திமுகவினரிடையே பரபரப்பு நிலவுகிறது.
திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை-ஸ்டாலின்:
இந் நிலையில் நில அபகரிப்பு என்ற பெயரில் எவ்வித ஆதாரமும் இன்றி திமுகவினர் பழிவாங்கப்பட்டு வருவதாக திமுக பொருளாளரும், சட்டப் பேரவை திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் மைலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,தோல்வியை கண்டு துவளாத இயக்கம் திமுக வெற்றி தோல்வியை சமமாக கருதி உழைப்பவன்தான் திமுக தொண்டன். அதனால்தான் இங்கே இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டிருக்கிறது.
சூரியன் அஸ்தமித்து விட்டது என்கிறார் ஜெயலலிதா. சூரியன் என்றுமே அஸ்தமிப்பது இல்லை. பூமி அதை சுற்றி வருவதால் அப்படி தெரிகிறது. மாற்றம் தேவை என்கிறார்கள். என்ன மாற்றம் என்பதை மக்கள் இப்போது பார்த்து விட்டார்கள். ஓட்டு போட்ட அவர்களுக்கு ஏமாற்றம்தான்.
சமச்சீர் கல்வி இந்த சமுதாயத்தை மேம்படுத்தும் திட்டம். அதை கொண்டு வந்தவர் கலைஞர் என்பதால் இந்த அரசு தடுக்கிறது. மருத்துவக் காப்பீட்டு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போன்றவை அதே காரணத்தால் முடக்கப்படுகிறது.
தலைமை செயலகத்தை மாற்ற முதலில் முடிவெடுத்தது ஜெயலலிதாதான். கடற்கரைசாலை, ராணி மேரிக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் தலைமை செயலகத்தைக் கட்ட முயன்றார். திமுக அரசு வந்ததும் அரசுக்கு சொந்தமான இடத்தில் தலைமை செயலகம் கட்டியது. அதற்கு விசாரணை கமிஷனாம். நாங்கள் பார்க்காத விசாரணை கமிஷனா? பழி வாங்கும் செயலை தொடங்கி இருக்கிறார்கள். ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். தடுக்க மாட்டோம்.
தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு என்ற பெயரில் எந்தவித ஆதாரம் இல்லாமல் திமுகவினர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். நாங்கள் சந்திக்கத் தயார்.
திமுக என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது. அதிமுக ஆட்சியை 6 மாதம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றுதான் நினைத்து இருந்தோம். ஆனால் ஒரு மாதத்திலே மக்களின் எதிர்ப்பை அரசு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.
திமுகவை அழிக்க நினைத்த எத்தனையோ பேர் தோற்றுவிட்டார்கள். தோல்விகளை சந்தித்தாலும் மீண்டு எழுந்து ஆட்சிக்கு வரும் இயக்கம் இது. பீனிக்ஸ் பறவையாக எழுந்து வருவோம் என்றார்.