விண்வெளி கழிவுகளை அகற்றும் செயற்கை கோளை அனுப்ப சுவிஸ் விஞ்ஞானிகள் முடிவு
பல பயன்களை கருத்தில் கொண்டு விண்ணில் செலுத்தப்படும் செயற்கை கோள்கள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு செயலிழக்கின்றன. அதன்பிறகு அவை விண்வெளியில் அனாதையாக சுற்றி திரிகின்றன. மேலும் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த பயன்படும் ராக்கெட்களின் உதிரிப்பாகங்களும் விண்ணில் சுற்றி வருகின்றன.
இதேபோல விண்வெளியில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் மற்றும் செயற்கை கோளின் பாகங்கள் சுற்றி கொண்டிருப்பதாக நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இவை சில நேரங்களில் பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமிக்கு வந்துவிடுகின்றன.
இதனால் தேவையற்ற பீதியும், அச்சமும் மக்களிடையே ஏற்படுகின்றது. மேலும் விண்ணில் சுற்றி வரும் பொருட்கள் 28,000 கி.மீ. வேகத்தில் சுற்றி வருவதாகவும், அவை ஒன்றையொன்று மோதும் அபாயம் உள்ளதாகவும் அஞ்சப்படுகின்றது. கடந்த 1996ம் ஆண்டு பிரான்சு நாட்டிற்கு சொந்தமான செயற்கை கோள் மீது விண்ணில் சுற்றிக் கொண்டிருந்த ராக்கெட் பாகங்கள் மோதி பாதிப்பை ஏற்படுத்தியது.
எனவே விண்ணில் பரவிக் கிடக்கும் விண்வெளி கழிவுகளை அகற்ற புதிய செயற்கைகோள் ஒன்றை விண்ணில் செலுத்த சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் தீர்மானித்து உள்ளனர். ஜானிடர் செயற்கை கோள் என்ற அழைக்கப்படும் இந்த புதிய செயற்கை கோள் ரூ.55 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றது. சுமார் 3 முதல் 5 ஆண்டுகளில் ஜானிடர் செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஜானிடர் செயற்கைகோளின் மூலம் விண்வெளி கழிவுகளை அப்புறப்படுத்தவே அல்லது பாதிப்பு இல்லாத வகையில் பூமிக்கு திரும்ப அனுப்பவோ தகுந்த நடவடிக்கையில் ஈடுபட போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.