ஜெயலலிதாவை சந்தித்து நவீன் பட்நாயக் முக்கிய ஆலோசனை
நவீன் பட்நாயக் 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்ட அவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கலாஷேத்ரா மையத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்த்தார்.
பின்னர் இன்று ஒடிஸ்ஸா சங்கத்தின் சார்பில் சென்னையில் கட்டப்படவுள்ள 'ஒடிசா பவன்' கட்டடத்தின் பூமி பூஜை நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. அதில் முதல்வர் ஜெயலலிதாவுடன் கலந்து கொண்டார் நவீன் பட்நாயக், பின்னர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பகல் 1.30 மணிக்கு ஜெயலலிதா அளிக்கும் மதிய விருந்திலும் அவர் பங்கேற்றார்.
இதில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விருந்து முடிந்ததும் போயஸ் கார்டன் இல்லத்தில் நவீன் பட்நாயக்கும் ஜெயலலிதாவும் சந்தித்துப் பேசினர்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஏற்கனவே சமீபத்தில் டெல்லி சென்றிருந்த ஜெயலலிதா இதுதொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் நவீன் பட்நாயக்குடன் ஒரு சுற்றுப் பேச்சு நடத்தியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. நவீன் பட்நாயக்கை எனது சகோதரராக பாவிக்கிறேன் என்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்துப் பேசினீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்தார் ஜெயலலிதா. இருப்பினும் அது குறித்துத்தான் முக்கியமாக இருவரும் விவாதித்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.