இதைப் பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை- கருணாநிதி
சென்னையில் செய்தியாளர்கள் இன்று கருணாநிதியைச் சந்தித்தனர். அப்போது பல கேள்விகளைக் கேட்டனர்.
குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளராக முதன் முதலில் ஜெயலலிதா தான் சங்மாவை அறிவித்தார். பிறகு பா.ஜ.க. தலைவர் அத்வானியுடன் பேசினார். ஜெயலலிதா அகில இந்திய அளவில் பெயர் வாங்குவதற்காக செய்த காரியங்கள் என்று நினைக்கிறீர்களா? அதிலே அவருக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு இதைப் பற்றியெல்லாம் நான் எதுவும் பேச விரும்பவில்லை என்றார் கருணாநிதி.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னணியினரையெல்லாம் அதிமுக ஆட்சியில் தொடர்ந்து கைது செய்யும் படலம் நீடித்துக் கொண்டே இருக்கிறதே; அதை முடிவுக்குக் கொண்டு வர திமுக என்ன செய்யப் போகிறது? என்ற கேள்விக்கு, நேற்று முன் தினம் கைதாகி நேற்று விடுதலையான மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் தளபதியை இன்று மீண்டும் கைது செய்வதற்கான முயற்சி நடைபெறுவதாகச் சொன்னார்கள். இதைப்பற்றியெல்லாம் யோசிக்க விரைவில் திமுக செயற்குழு அல்லது பொதுக் குழு கூடி முடிவெடுக்கும் என்றார் கருணாநிதி.
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளிலே கூட சிங்களவர்களை குடியமர்த்துகிறார்களே? என்ற கேள்விக்கு அதைப்பற்றியெல்லாம் பேசத்தான் டெசோ மாநாடு என்ற கருணாநிதி, மாநாட்டு வேலைகள் குறித்துக் கூறுகையில், மாநாடு நடைபெறுவதற்கான இடம் எல்லாம் பார்த்தாகி விட்டது. அங்கேயுள்ள புல், பூண்டுகளைச் செதுக்கி சுத்தம் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டு ஏற்பாடுகளையெல்லாம் மாநாட்டின் செயலாளர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று பதிலளித்தார்.