டீ கடைக்காரரை தாக்கிய பேரூராட்சி துணை தலைவர், கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது
நெல்லை: டீயில் கூடுதலாக சீனி போடுமாறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் டீக்கடைக்காரரை தாக்கிய வள்ளியூர் பேரூராட்சி துணை தலைவர், கவுன்சிலர், கவுன்சிலரின் கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். தேமுதிகவைச் சேர்ந்த அவர் வள்ளியூர் பேரூராட்சி துணை தலைவராக உள்ளார். நேற்று அவரும் பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் விஜி வேலாயுதம், 17வது வார்டு கவுன்சிலரின் கணவர் கணேசன் ஆகியோர் வள்ளியூர் ரயில்வே கேட் அருகேயுள்ள அடைக்கலம் என்பவரது டீகடைக்கு சென்றனர். அடைக்கலத்தின் தம்பி சிதம்பரம் என்பவர் அவர்களுக்கு டீ போட்டு கொடுத்தார். அப்போது ராமசந்திரன் டீயில் இனிப்பு குறைவாக இருந்தது. இதனால் கூடுதலாக சீனி போடு என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சிதம்பரம் கொஞ்சம் சீனி போட்டார். அப்போது சீனி விற்கும் விலைக்கு இவ்வளவுதான் போட முடியும் என்றும் கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ராமச்சந்திரன், விஜி வேலாயுதம், கணேசன் ஆகியோர் சேர்ந்து அடைக்கலம், சிதம்பரம் ஆகியோரை தாக்கினர். பதிலுக்கு அவர்களும் திருப்பி தாக்கினர். இதனால் பஜார் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வள்ளியூர் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து ராமசந்திரன், விஜிவேலாயுதம், கணேசன், சிதம்பரம் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய அடைக்கலத்தை தேடி வருகின்றனர்.
ராமசந்திரன் மீது ஏற்கனவே கொலை, கட்டப்பஞ்சாயத்து, நில மோசடி என பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.